குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தை சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தில் முதலீடு செய்த சம்பவத்தில் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் யோஷித்த ராஜபக்ச வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை தற்காலிகமாக நீக்கி கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தை தொலைக்காட்சி நிறுவனத்தில் முதலீடு செய்ததன் மூலம் பணச்சலவை சட்டத்தின் குற்றம் செய்துள்ளதாக கூறப்படும் யோஷித்த ராஜபக்ச வெளிநாடு செல்ல மேல் நீதிமன்றம் தடைவிதித்திருந்தது.
இந்த நிலையில், தனது சட்டத்தரணி ஊடாக மனுவொன்றை தாக்கல் செய்திருந்த யோஷித்த ராஜபக்ச, ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் வாழும் இலங்கையர்கள் ஏற்பாடு செய்துள்ள வைபவம் ஒன்றின் பிரதம அதிதியாக கலந்துக்கொள்ள உள்ளதால், அதில் கலந்துக்கொள்ள வெளிநாடு செல்ல அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த கோரிக்கையை ஆராய்ந்த நீதிமன்றம் தடையை தற்காலிகமாக நீக்கியுள்ளது. யோஷித்த ராஜபக்சவின் இந்த கோரிக்கைக்கு சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மோசடி செய்யப்பட்டதாக கூறப்படும் பெருந்தொகை பணம் துபாய் உட்பட ஐக்கிய அரபு ராஜ்ஜிய நாடுகளில் உள்ள வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது