Home இலங்கை 80 இலட்சம் ரூபா மோசடிக் குற்றச்சாட்டு – சந்தேக நபர்களுக்கு பிணை…

80 இலட்சம் ரூபா மோசடிக் குற்றச்சாட்டு – சந்தேக நபர்களுக்கு பிணை…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்….

வங்கிகளின் ஏரிஎம் இயந்திரங்களில் மீள்நிரப்ப எடுத்து வரப்பட்ட பணத்தில் 80 இலட்சம் ரூபா மோசடி செய்தனர் என்ற குற்றச்சாட்டில் நீதிமன்ற தடுப்புக் காவலில் இருந்த 5 பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் பிணையில் விடுவித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது. எனினும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் எவரும் கடந்த 2 தவணைகளாக மன்றில் முன்னிலையாகி விசாரணை தொடர்பான அறிவிப்பை வெளிப்படுத்தவில்லை. அவர்களின் அசமந்த செயற்பாட்டை கண்டித்த நீதிவான் சி.சதீஸ்தரன், சந்தேகநபர்கள் ஐவருக்கும் பிணை வழங்கி கட்டளை வழங்கினார்.

அனுராதபுரம் பகுதியில் இயங்குகின்ற தனியார் பாதுகாப்பு நிறுவனமொன்று யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் வங்கிகளின் ஏ.ரி.எம் நிலையங்களுக்கு பணத்தை விநியோகம் செய்யும் பணியை முன்னெடுத்து வருகின்றது.

கடந்த மார்ச் மாதம் 9ஆம் திகதி அனுராதபுரத்திலிருந்து 11 கோடியே 74 இலட்சம் ரூபா பணத்தை 5 பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் அந்த நிறுவனம் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைத்தது. யாழ்ப்பாணம் வந்து பணத்தை சரி பார்த்தபோது, அதில் 80 இலட்சம் ரூபா பணம் குறைவடைந்து காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்தப் பணத்தை எடுத்து வந்த வாகனத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களாக வந்த பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் வைக்கப்பட்டனர்.

அவர்கள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியால் பிணை விண்ணப்பம் செய்தார்.

“இந்த வழக்கு விசாரணைகள் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எனினும் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் எவரும் இரண்டு தவணைகளாக மன்றில் தோன்றவில்லை. எனவே இந்த வழக்கில் அவர்கள் அக்கறை கொள்ளவில்லை. அதனால் சந்தேகநபர்களை பிணையில் செல்ல அனுமதிக்கவேண்டும்” என சட்டத்தரணி மன்றில் விண்ணப்பம் செய்தார்.

“குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பல தடவைகள் அறிவிக்கப்பட்டது. பல தடவைகள் நினைவூட்டப்பட்டது” என்று பொலிஸார் மன்றில் தெரிவித்தனர்.  “பொதுச் சொத்துக்கள் மோசடிச் சட்டத்தின் கீழ் சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கக் கூடாது. விசாரணைகள் இடம்பெறவுள்ள நிலையில் அவர்கள் பிணையில் சென்றால் பாதிப்பு ஏற்படும்” என்று பாதுகாப்பு சேவை நிறுவனம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றில் விண்ணப்பம் செய்தார்.

இரு தரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிவான் சி.சதீஸ்தரன், சந்தேகநபர்கள் நிபந்தனையுடனான பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

சந்தேகநபர்கள் 5 பேரும் தலா 2 இலட்சம் ரூபா பெறுமதியான 2 ஆள் பிணையை மன்றில் முற்படுத்தவேண்டும். அவர்களின் வதிவிட முகவரியை கிராம அலுவலர் உறுதிப்படுத்தவேண்டும்” என்ற நிபந்தனையை மன்று விதித்தது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More