Home இலங்கை எலும்புக்கூடுகளின் ஊர்வலம் மன்னாரில் தொடர்கிறது….

எலும்புக்கூடுகளின் ஊர்வலம் மன்னாரில் தொடர்கிறது….

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் – மன்னார்..

மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட மண்ணில் மனித எலும்புகள் காணப்பட்ட நிலையில் குறித்த வளாகம் இன்று புதன் கிழமை(16.05.18) காலை மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் அகழ்வுப் பணிகள் இடம் பெற்றது.

‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்ட மண் மன்னாரில் பல இடங்களுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது. இதன் போது மன்னார் எமில் நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்கு கொட்டப்பட்ட மண்ணில் மனித எலும்புகள் காணப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் குறித்த வீட்டின் உரிமையாளர் கடந்த மார்ச் மாதம் 26 ஆம் திகதி மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த நிலையில்  குறித்த வீட்டிற்கு சென்று கொட்டப்பட்ட மண்ணினை மன்னார் காவற்துறையினர் பார்வையிட்டதோடு, மன்னார் நீதி மன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்த நிலையில் மார்ச் மாதம் 27 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா மற்றும் விசேட சட்ட வைத்திய நிபுணர் ஆகியோர் முன்னிலையில் கொட்டப்பட்ட மற்றும் வீட்டு வளாகத்தினுள் பரவப்பட்ட மண்ணில் இருந்து சந்தேகத்திற்கிடமான எலும்புத்துண்டுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.

அதனைத்தொடர்ந்து மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த ‘லங்கா சதொச’ விற்பனை கட்டிட நிர்மானப்பணிகள் இடை நிறுத்தப்பட்டன.

இந்த நிலையில் மண் அகழ்வு செய்யப்பட்டு மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்ட ‘லங்கா சதொச கட்டிட பகுதிக்கு நேற்று செவ்வாய்க்கிழமை(15.05.18) மாலை மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா மற்றும் விசேட சட்ட வைத்திய நிபுணர்,விசேட தடவியல் நிபுனத்துவ காவற்துறையினர்  ஆகியோர் சென்று பார்வையிட்டதோடு, நேற்று செவ்வாய்க்கிழமை முதல் கட்ட அகழ்வு பணிகள் இடம் பெற்ற நிலையில் இன்று புதன் கிழமை(16) காலை 8 மணியளவில் மன்னார் நீதவான் முன்னிலையில் அகழ்வுகள்  மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

இதன் போது மேலும் பல மனித எலும்புத்துண்டுகள் மீட்கப்பட்டன. உடைக்கப்பட்ட குறித்த கட்டிட பகுதியில் அதிகலவான நீர் காணப்பட்டமையினால் நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் நீதவான் பார்வையிட்டு அகழ்வுகள் இடம் பெற்றன.

இதனை அடுத்து  காலை 9.20 மணியளவில் அகழ்வுப்பணிகள் நிறுத்தப்பட்டு,  தற்போது குறித்த பகுதிக்கு காவற்துறைப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் மீண்டும்  நாளை (17.05.18) வியாழக்கிழமை அகழ்வுப்பணி இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

   

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More