Home இலங்கை இளம் பெண்ணின் தற்கொலை – சட்டத்தரணி மீதான குற்றச்சாட்டை விசாரிக்க பணிப்பு…

இளம் பெண்ணின் தற்கொலை – சட்டத்தரணி மீதான குற்றச்சாட்டை விசாரிக்க பணிப்பு…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

இளம் பெண் ஒருவரின் தற்கொலைக்கு சட்டத்தரணி ஒருவர் மீது சாட்டப்பட்ட குற்றசாட்டு தொடர்பில் விசாரிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டது.

சட்டத்தரணி மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எந்தவொரு ஆதாரங்களும் இல்லை என யாழ்ப்பாணம் தலைமையக காவல் நிலைய குற்ற விசாரணைப் பிரிவு முன்வைத்த விசாரணை அறிக்கை தொடர்பில் அதிருப்தியை வெளியிட்ட யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், இந்த உத்தரவை வழங்கினார்.

யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த 23 வயதுடைய  நாகேஸ்வரன் கௌசிகா என்ற இளம் பெண் கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி தற்கொலை செய்துகொண்டார். யாழ்ப்பாணம் மருதடியிலுள்ள தனது நண்பியின் இல்லத்தில் யாரும் இல்லாத வேளை அவர் தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்வதற்கு முன்னர் இளம் பெண் எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்றை யாழ்ப்பாணம் தலைமையகக் காவற்துறையினர்  மீட்டனர். இளம் பெண் கடந்த வருடம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான போதிலும் வீட்டின் வறுமை சூழ்நிலை காரணமாக பல்கலைக்கழகம் செல்லவில்லை என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்

இந்நிலையில் யாழ் மாவட்ட விழிப்புலன்ற்றவர் சங்கத்தில் கடமையாற்றி வந்த கௌசிகா, எழுதியுள்ள கடித்த்தில் அந்த சங்கத்தின் தலைவரும் சட்டத்தரணியுமாக செயற்படுபவர்தான் தனது தற்கொலைக்கு காரணம் என குறிப்பிடப்பட்டிருந்தார்.

பல்லேறு ஊழல் தொடர்பான விடயங்களில் அந்த சட்டத்தரணி என்னை கட்டாயப்படுத்தி வந்ததார். பெரும் தொகையான பணத்தை நான் திருடிவிட்டதாக தெரிவித்து என்னை அச்சுறுத்தினார். எனவேதான் தற்கொலை செய்துகொள்ள தீர்மானித்தேன்” என்று இளம் பெண் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட சட்டத்தரணியிடம் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் இளம் பெண்ணின் குற்றச்சாட்டுத் தொடர்பில் உண்மைத் தன்மையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரன் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் இளம் பெண்ணின் தற்கொலை குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. யாழ்ப்பாண தலைமையக காவற்துறை நிலைய குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி மன்றில் தோன்றி விசாரணை அறிக்கையை முன்வைத்தார்.

இளம் பெண்ணின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆதாரங்கள் இல்லை என்றும் அவை தொடர்பில் உண்மைத் தன்மை இல்லை எனவும் காவற்துறையினரின் அறிக்கையில் கூறப்பட்டது.

அந்த அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்ட விடயங்களில் மன்று அதிருந்தியடைந்தது. உரிவாறு விசாரணை நடத்தப்படவில்லை என்று காவற்துறை  பொறுப்பதிகாரியை மன்று கண்டித்தது.

“இந்த விசாரணை அறிக்கை தொடர்பில் மன்று அதிருப்தி கொளகிறது. இளம் பெண்ணால் சட்டத்தரணி மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விரிவாக விசாரணைகளை மேற்கொண்டு வழக்கை முன்னெடுக்குமாறு கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிடப்படுகிறது” என்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சி்ன்னத்துரை சதீஸ்தரன் கட்டளை வழங்கினார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More