Home இலங்கை புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில், நிரபராதி இந்திரகுமாரை விடுவிக்க அறிவுறுத்துமாறு உத்தரவு…

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில், நிரபராதி இந்திரகுமாரை விடுவிக்க அறிவுறுத்துமாறு உத்தரவு…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…


புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் நிரபராதியாக தீர்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பூபாலசிங்கம் இந்திரகுமாருக்கு எதிரான காவற்துறையினரை அச்சுறுத்திய வழக்கை மீளப்பெறுவது தொடர்பான சட்ட மா அதிபரின் தீர்மானத்தை ஊர்காவற்றுறை நீதிமன்றுக்கு உடனடியாக அறிவிக்குமாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

காவற்துறையினரை அச்சுறுத்திய வழக்கிலிருந்து சந்தேகநபரை விடுவிப்பதற்கான தீர்மானத்தை சட்ட மா அதிபர் எடுத்திருப்பதாக அரச சட்டவாதியால் கடந்த தவணையின் போது யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றுக்கு தெரிவிக்கப்பட்டது.

அது தொடர்பில் ஊர்காவற்றுறை நீதிமன்றுக்கு அறிவித்து சந்தேகநபரை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அரச சட்டவாதிக்கு அறிவுறுத்தல் வழங்கிய யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், சந்தேகநபர் சார்பான பிணை கோரிய சீராய்வு மனு மீதான விசாரணையை வரும் 10ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.

புங்குடுதீவு மாணவி  கொலை வழக்கில் பூபாலசிங்கம் இந்திரகுமார் நிரபராதி எனத் தீர்பளிக்கப்பட்டு 11 மாதங்கள் கடந்துள்ள நிலையில் அவர் காவற்துறை உத்தியோகத்தரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில் இடம்பெற்று வருகிறது.

இந்த நிலையில் பூபாலசிங்கம் இந்திரகுமார் சார்பில் அவரது மனைவி, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் பிணை கோரி சீராய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

வறுமை காரணமாக மேல் நீதிமன்றில் பிணை விண்ணப்பம் செய்ய சட்டத்தரணி ஒருவரை நியமிக்க முடியாத நிலையில் இந்திரகுமாரின் குடும்பம் அவதியுற்றனர். எனினும் இளம் சட்டத்தரணி சிவலிங்கம் ரிஷிகேசன் இலவசமாக இந்திரகுமாருக்கு சீராய்வு மனுவை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.

சட்டத்தரணி சி.ரிஷிகேசனுடன் சட்டத்தரணி வி.திருக்குமரனும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் முன்னிலையாகி இந்திரகுமார் சார்பான சீராய்வு மனுவுக்கு மன்றில் விண்ணப்பம் செய்திருந்தார்.

சீராய்வு மீதான விசாரணை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே யாழ்ப்பாண மேல் நீதிமன்றால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More