Home இலங்கை 11 இளைஞர்கள் கடத்தல் – அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன விரைவில் கைது செய்யப்படுவார்!

11 இளைஞர்கள் கடத்தல் – அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன விரைவில் கைது செய்யப்படுவார்!

by admin

செய்தி தொகுப்பு – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

சிரேஸ்ட படை அதிகாரியான- பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இந்த வாரம் கைது செய்யப்படுவார் என இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பில் 11 இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான கடற்படை புலனாய்வு அதிகாரி நேவி சம்பத் நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல அட்மிரல் விஜேகுணரத்ன உதவினார் என்ற குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்படவுள்ளார்.
குறித்த காணாமலாக்கப்பட்ட சம்பவத்திற்கு அட்மிரல் விஜேகுணரத்ன உதவியது தொடர்பில் போதிய ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடந்த புதன்கிழமை கோட்டை நீதிமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில், அவரைக் கைது செய்யுமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இராணுவத்தின் நான்கு நட்சத்திர ஜெனரல் ஒருவருக்கு இணையான பதவி வகிக்கும் அட்மிரல் விஜேகுணரத்னவைக் கைது செய்ய உத்தரவிடப்பட்ட பின்னரும், அவர் வெளிநாட்டு பிரதிநிதிகளைச் சந்திக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்ட சமயத்தில் முன்னாள் கூட்டுப்படைத் தளபதி ஜெனரல் றொகான் தளுவத்தவின் இறுதிச்சடங்கில் பங்கேற்றிருந்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேபாளத்தில் பிம்ஸ்ரெக் மாநாட்டிற்கு சென்றமையால் கைது நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டதாகவும் அவர் நாடு திரும்பியுள்ள நிலையில் இந்த வாரம் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அட்மிரல் விஜேகுணரத்னவைக் கைது செய்வதை அரச உயர்மட்டத்தில் உள்ள ஒருவர் தடுத்து வைத்திருப்பதாகவும் நாளையுடன் அட்மிரல் விஜேகுணரத்னவின் பதவிக்காலம் முடிவடைகின்றமை காரணமாக அவரை கௌரவமாக வழியனுப்பி வைத்த பின்னர், கைது செய்யப்படுவார் என்றும கூறப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More