Home இலங்கை யாழில் குற்றசெயல் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்காத காவல்துறையினருக்கு இடமாற்றம்

யாழில் குற்றசெயல் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்காத காவல்துறையினருக்கு இடமாற்றம்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழில். இடம்பெற்ற குற்றசெயல் தொடர்பில் இரண்டு நாட்களாக விசாரணைகள் எதனையும் முன்னெடுக்காது இருந்த யாழ். காவல் நிலைய பெருங்குற்ற பிரிவில் கடமையாற்றிய 17 காவல்துறையினருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வடமாகாண சிரேஸ்ட பிரதிக் காவல்துறைமா அதிபரின் உத்தரவின் பேரிலையே இடம் மாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

யாழ்.நகர் பகுதியில் உள்ள கடையொன்றில் கடந்த 24ஆம் திகதி 10 லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டன. அது குறித்து மறுநாள் கடை உரிமையாளரால் யாழ். காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. தனது முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினர் உரிய விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என வடமாகாண சிரேஸ்ட பிரதி காவல்துறைமா அதிபரின் கவனத்திற்கு கடை உரிமையாளர் கொண்டு சென்றார்.

அதனை அடுத்து யாழ்.மாவட்ட உதவி காவல்துறை அத்தியட்சகர் தலமையில் குழுவொன்றினை அமைத்து , விசாரணைகளை முன்னெடுக்க வடமாகாண சிரேஸ்ட பிரதிக் காவல்துறைமாஅதிபர் பணித்தார்.அதன் பிரகாரம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது, கடை உரிமையாளரின் முறைப்பாட்டை அடுத்து அப்போது கடமையில் இருந்த சார்ஜண்ட் தர உத்தியோகஸ்தர் பதிவேட்டு புத்தகத்தில் வெளிச்செல்லும் பதிவு எதனையும் மேற்கொள்ளாது , சம்பவ இடத்திற்கு சென்றதுடன் , சம்பவ இடத்தில் தன்னால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தனது குறிப்பேட்டில் பதிந்த போதும் அதனை பின்னர் குற்றப்பதிவு புத்தகத்தில் அன்றைய தினமே ஒட்டாது. மறுநாளே ஒட்டியுள்ளார். போன்ற விடயங்களை விசாரணைக்குழு கண்டறிந்து , வடமாகாண சிரேஸ்ட பிரதிக் காவல்துறைமா அதிபருக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.

அதன் பிரகாரம் பெருங்குற்ற பிரிவில் கடமையாற்றிய அத்தனை உத்தியோகஸ்தர்களுக்கும் இடம் மாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை இவ்வாறான சம்பவங்கள் இதற்கு முன்னரும் நடைபெற்றதா ? என விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More