Home இலங்கை காட்டு யானைகளின் அச்சுறுத்தல் மத்தியில் மீள்குடியேறிய முள்ளிக்குளம் கிராம மக்கள்

காட்டு யானைகளின் அச்சுறுத்தல் மத்தியில் மீள்குடியேறிய முள்ளிக்குளம் கிராம மக்கள்

by admin

விடுவிக்கப்பட்ட காணிகளில் தற்காலிக கூடாரங்களை அமைக்க கடற்படை தடை:

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


இடம் பெயர்ந்து மீள் குடியேறிய முள்ளிக்குளம் மக்கள் தங்களுக்கு விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட காணியில் பாதுகாப்பு கருதி தற்காலிக கொட்டகைகளை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது கடற்படையினர் குறித்த நடவடிக்கைகளுக்கு தடை விதித்துள்ளதாக பாதிக்கப்பட்ட முள்ளிக்குளம் கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மழை வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு,காட்டு யானைகளினாலும் அந்த மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமக்கு ஒதுக்கப்பட்ட காணிகளில் தற்காலிக கூடாரங்களை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது அங்குள்ள கடற்படையினர் தற்காலிக கூடாரங்களை அமைக்க தடை விதித்தமையினால் முள்ளிக்குளம் மக்களுக்கும் கடற்படையினருக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து முள்ளிக்குளம் பங்குத்தந்தையின் பணிப்புரைக்கு அமைவாக மக்கள் தற்காலிக கூடாரங்கள் அமைப்பதை இடை நிறுத்தியுள்ளனர். முள்ளிக்குளம் மக்கள் அங்கு மீள் குடியேறச் சென்ற பொழுது அவர்களின் குடியிருப்பு காணிகள் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் விடுவிக்கப்படும் என கடற்படை அறிவித்திருந்தமையினால் அவர்கள் பல மாதங்களாக முள்ளிக்குளம் பகுதியில் காடுகளில் தற்காலிகை கொட்டகைகள் அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் காட்டுப்பகுதி பள்ளத்தாக்கில் அவர்கள் தற்காலிக கொட்டகை அமைத்து இருப்பதால் அப்பகுதியில் மழை நீர் வெள்ளம் சூழ்ந்து கொண்டிருப்பதனால் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள்,வயோதிபர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும் மழை காரணமாக காட்டு யானைகளும் தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்களுக்குள் வர ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையிலே தமது பாதுகாப்பை கருத்தில் கொணடு முள்ளிக்குளம் மக்கள் விடுவிக்கப்பட்ட தமது காணிகளில் கூடாரங்களை அமைக்க முயற்சி செய்த போது கடற்படை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் மீண்டும் அந்த மக்கள் பாதுகாப்பற்ற இடத்துக்குத் திரும்பியுள்ளனர்.

பல போராட்டங்களின் பின்னர் நாங்கள் எங்கள் கிராமத்துக்குள் மீள் குடி யேற அனுமதிக்கப்பட்டிருந்தோம். எங்கள் வீடுகளில் கடற்படையினரின் குடும்பங்கள் அமர்ந்திருக்க நாங்கள் எங்கள் வீடுகளுக்கு முன்பாக உள்ள காட்டுப்பகுதிக்குள் தற்காலிக கொட்டகைகள் அமைத்து பாதுகாப்பற்ற முறையில் வாழ்ந்து வருகின்றோம்.

நாங்கள் மீள் குடியேறுவதற்கு வருகை தந்த பொழுது குறிப்பிட்ட காலத்துக்குள் எங்களின் வீடுகள் விடுவிக்கப்படும் எனவும் அதே நேரத்தில் எங்களின் குடியிருப்பு காணிகள் குறிப்பிட்ட காலத்தில் விடுவிக்கப்படும் எனவும் எங்களுக்கு கடற்படையினரினால் உத்தரவாதமளிக்கப்பட்டது.ஆனால் காலங்கள் கடந்தும் இவைகள் நடை முறைப்படுத்தப்படவில்லை என முள்ளிக்குளம் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More