Home இலங்கை தென்மராட்சியில் பல நீரிறைக்கும் மின் மோட்டர்களை திருடியவர் கைது

தென்மராட்சியில் பல நீரிறைக்கும் மின் மோட்டர்களை திருடியவர் கைது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தென்மராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் அண்மையில் நீரிறைக்கும் மின் மோட்டர்களை திருடி வந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இன்று காலை கொடிகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மின்மோட்டரை ஒருவர் களவாட முற்படுவதாக மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறையினருக்கு வீட்டு உரிமையாளர் தகவல் கொடுத்துள்ளதையடுத்து மாவட்ட குற்றப்புலனாய்வு பொறுப்பதிகாரி உப காவல்துறை பரிசோதகர் ஜே.ஜெயறோசன் தலைமையிலான புலனாய்வு அணியினர் குறித்த நபரை கையும் மெய்யுமாக கைது செய்துள்ளனர்.

கைதானவரிடம் விசாரணைகளை மேற்கொண்டபோது சாவகச்சேரி காவல்துறை பிரிவிற்குள் இந்த மாதம் மட்டும் ஆறு மின்மோட்டர்களை திருடி யாழ்ப்பாணத்தில் உள்ள மின் மோட்டார் திருத்தும் நிலையத்தில் விற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து துரிதமாக செயற்பட்ட குற்றப்புலனாய்வு காவல்துறையினர் யாழ்ப்பாணத்தில் உள்ள மோட்டர் திருத்தும் கடை உரிமையாளரிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது தான் அவ்வாறு களவாடப்பட்ட மோட்டர் எதனையும் வாங்குவதில்லை என காவல்துறையினருடன் முரண்பட்டுள்ளார்.

இதையடுத்து அங்கிருந்த கண்காணிப்பு கமராக்களை காவல்துறையினர் ஆராய்ந்த போது குறித்த கடை உரிமையாளர் தனது கடைக்கு வெளியே சற்று தூரத்தில் வைத்து மின் மோட்டர்களை கொள்வனவு செய்வது தெரிய வந்துள்ளது.  இதையடுத்து கொள்ளையிட்டு விற்கப்பட்ட ஆறு மின் மோட்டர்களையும் மீட்டதுடன் கடை உரிமையாளரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மோட்டார் திருட்டு சந்தேகநபர் புத்தளம் பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் திருடிய மோட்டர்களை மூவாயிரம் ரூபாவிற்கே விற்பனை செய்துவந்துள்ளதாகவும் மாவட்ட குற்றப்புலனாய்வு காவல்துறையினர் தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More