Home இலங்கை மன்னார் பாடசாலைகள் புத்தளத்தில் இயங்குவதனால் மாணவர்கள் கடும் பாதிப்பு -செல்வம் அடைக்கலநாதன் ஆளுனருக்கு கடிதம் :

மன்னார் பாடசாலைகள் புத்தளத்தில் இயங்குவதனால் மாணவர்கள் கடும் பாதிப்பு -செல்வம் அடைக்கலநாதன் ஆளுனருக்கு கடிதம் :

by admin

மன்னார் மாவட்டத்திற்குரிய பல பாடசாலைகள் தற்போதும் புத்தளம் மாவட்டத்தில் இயங்கி வருவது தொடர்பில் கவனமெடுத்து நடவடிக்கை எடுக்குமாறு வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் வட மாகாண ஆளுனருக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மன்னார் மாவட்டத்திற்குட்பட்ட பல பாடசாலைகள் இன்றும் புத்தளம் மாவட்டத்திலேயே இயங்கிக் கொண்டிருக்கின்றன.

அந்த ஆசிரியர்களுக்குரிய சம்பளமும் அங்கு அனுப்பப்பட்டுக்கொண்டிருக்கின்றன. 1990 ஆம் ஆண்டு வடமாகாணத்தில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டிருந்ததனால் அம் மாணவர்கள் அங்கு கல்வி கற்பதற்காக ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தன. நாட்டில் சுமூகமான சூழ்நிலைகள் ஏற்பட்ட பின்னரும் அப் பாடசாலைகள் புத்தளம் மாவட்டத்திலேயே இயங்கிக் கொண்டிருக்கின்றன.

மன்னார் மாவட்டத்தைச்சேர்ந்த மாணவர்கள் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து கல்வியை கற்று உயர்தரப்பரீட்சைக்கு தோற்றுகின்றனர். இந் நிலையில் புத்தளத்தில் கற்கும் மாணவர்கள் பல வசதிகளுடன் கற்றலை மேற்கொண்டு மன்னார் மாவட்ட உயர் தரப்பரீட்சைக்கு தோற்றுகின்ற நிலையில் அவர்களும் மன்னார் மாவட்டத்தின் வெட்டுப்புள்ளியிலேயே கணக்கெடுக்கப்படுகின்றனர்.

இதன் காரணமாக மன்னாரிலேயே இருந்து மன்னாரிலேயே கல்வி கற்கின்ற மாணவர்களுக்கான வாய்ப்புக்கள் தட்டிப் பறிக்கப்படுகின்றமையினால் கடுமையான பாதிப்புக்களை எதிர் நோக்கி வருகின்றனர். புத்தளத்தில் இயங்குகின்ற பாடசாலைகள் புத்தளம் மாவட்டத்தினுள்ளேயே பதிவு செய்யப்பட வேண்டும்.

இல்லையெனில் குறித்த பாடசாலைகள் மன்னார் மாவட்டத்திலுள்ள தமது சொந்த இடங்களில் இயங்கி கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஒரு தீர்மானம் வட மாகாணசபையால் நிறைவேற்றப்பட்டது. முன்னாள் வடமாகாண ஆளுநரின் கவனத்திற்கு இவ்விடயம் கொண்டு செல்லப்பட்டு அவர் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

எனினும் அவை இதுவரை நிறைவேற்றப்படாமலேயே உள்ளது. இதன் மூலம் மன்னார் மாவட்டத்தில் உயர்கல்வி கற்கின்ற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றமையும் மன்னார் மாவட்ட மாணவர்களின் வளங்கள் புத்தளம் மாவட்டத்தினால் பயன்படுத்தப்படுகின்றமையும் மன்னார் மாவட்ட மாணவர்கள் பாதிக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆகவே இதை நீங்கள் உடனடியாக கவனத்தில் கொண்டு குறித்த பாடசாலைகளை புத்தளம் மாவட்டத்தினுள் பதிவு செய்யுமாறும் இல்லையெனில் அப்பாடசாலைகள் மன்னார் மாவட்டத்தில் இயங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

#மன்னார்  #பாடசாலைகள்  #மாணவர்கள் #பாதிப்பு  #செல்வம் அடைக்கலநாதன்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More