Home உலகம் பப்புவா சிறைச்சாலையிலிருந்து 250 கைதிகள் தப்பியோட்டம்

பப்புவா சிறைச்சாலையிலிருந்து 250 கைதிகள் தப்பியோட்டம்

by admin

இந்தோனேசிய அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் பப்புவாவில் உள்ள சிறைச்சாலையை தாக்கியதில் 250-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள தன்னாட்சி பிராந்தியமான பப்புவா டச்சு காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்து 1963-ம் ஆண்டு விடுதலை பெற்று தன்னை தானே தனிநாடாக அறிவித்துக்கொண்டது.

எனினும் இயற்கை வளங்கள் மிகுந்த பப்புவா பிராந்தியத்தை இந்தோனேசியா வலுக்கட்டாயமாக தன்னோடு இணைத்துக்கொண்டு தன்னாட்சி அதிகாரத்தை வழங்கியது. இதனால் பப்புவா பிராந்தியத்தில் உள்ள பிரிவினைவாத அமைப்பு பல ஆண்டுகளாக இந்தோனேசிய அரசுக்கு எதிராக போராடி வருகிறது.

இந்த நிலையில், கடந்த 17ம் திகதி இந்தோனேசிய சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது மேற்கு பப்புவா மாகாணத்தில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் கைது செய்து கொண்டு சென்றமை மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.

மேற்கு பப்புவா மாகாணத்தின் தலைநகர் மனோக்குவாரி, சோரோங், ஜெயபுரா உள்ளிட்ட நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் மேற்கொண்ட போது போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும்; இடையே பெரும் கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற கட்டிடத்துக்கு தீவைத்தனர்.

இந்த நிலையில், இந்த போராட்டத்தின்போது சோரோங் நகரில் உள்ள சிறைச்சாலைக்குள் சிறைக்காவலர்களை மீறி உள்ளே நுழைந்த போராட்டக்காரர்கள் சிறை கட்டிடத்துக்கு தீவைத்தனர்.

இதனால் சிறைக்குள் மிகவும் பதற்றமான சூழல் உருவானது. காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தண்ணீரை பிரயோகித்தும் போராட்டக்காரர்களை சிறையில் இருந்து விரட்டியடிக்க முற்பட்டனர்.

இந்தநிலையில் இந்த கலவரத்தை பயன்படுத்தி கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓடியுள்ளனர். தடுக்க முயன்ற சிறைக்காவலர்களை கற்களை வீசியும், கூர்மையான ஆயுதங்களை கொண்டு தாக்கிவிட்டும் அவர்கள் தப்பி சென்றதனால் சிறை அதிகாரிகள் உள்பட பலர் பலத்த காயம் அடைந்தனர்.

சிறையில் இருந்து 258 கைதிகள் தப்பிவிட்டனர் எனவும் அவர்களில் 5 பேர் மட்டுமே மீண்டும் சிறைக்கு திரும்பியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மக்கள் போராட்டத்தினால் ஏற்கனவே பப்புவா பிராந்தியத்தில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றவழக்குகளில் கைது செய்யப்பட்ட 250-க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையில் இருந்து தப்பியிருப்பது மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.  #பப்புவா #சிறைச்சாலை #கைதிகள் #தப்பியோட்டம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More