Home இலங்கை பறந்துகொண்டிருந்த விமானம் தரையிறக்கப்பட்டு, தமிழ்க் குடும்பம் இறக்கிவிடப்பட்டது…

பறந்துகொண்டிருந்த விமானம் தரையிறக்கப்பட்டு, தமிழ்க் குடும்பம் இறக்கிவிடப்பட்டது…

by admin

அவுஸ்திரேலியாவில் இருந்து தமிழ்க் குடும்பம் ஒன்று நாடு கடத்தப்படுவதற்காக,  இலங்கை செல்லும் விமானத்தில் வலுக்கட்டாயமாக ஏற்றப்பட்டு விமானமும் புறப்பட்ட நிலையிலும் அவுஸ்திரேலிய நாட்டின் செயற்பாட்டாளர்கள் போராடி நாடு கடத்தலைத் தடுத்துள்ளனர். பறந்துகொண்டிருந்த விமானம் தரையிறக்கப்பட்டு, அந்த குடும்பம் இறக்கிவிடப்பட்டுள்ளது.

விமானம் புறப்பட்டபிறகு நீதிபதி ஒருவர் தொலைபேசி மூலம் பிறப்பித்த உத்தரவால் நடேசலிங்கம், பிரியா இவர்களின் இரண்டு பெண் குழந்தைகள் இலங்கைக்கு அனுப்பப்படுவது தடுக்கப்பட்டது. விமானம் தரையிறக்கப்பட்டு இந்தக் குடும்பம் கீழே இறக்கிவிடப்பட்டது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் அதிகாரிகள் இந்தக் குடும்பத்தை அவர்களின் குயின்ஸ்லாந்து வீட்டில் இருந்து பலவந்தமாக வெளியேற்றிய போது அவர்களுக்கு ஆதரவான குரல்கள் அவுஸ்திரேலிய நாடு முழுவதும் எதிரொலித்தன.

அவர்கள் அகதிகள் அல்ல என்று கூறி இவர்கள் வெளியேற்றப்படுவதற்கு ஆதரவான அரசின் நிலைப்பாட்டுக்கு வெள்ளிக்கிழமை அங்கீகாரம் கிடைத்தது. “நம் நாட்டின் மூலம் பாதுகாப்பைப் பெறுவதற்கு அவர்கள் உரியவர்கள் அல்லர்” என்று உள்ளூர் ஊடகங்களிடம் உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் தெரிவித்தார்.

“அடைக்கலம் கோரி அந்தக் குடும்பம் விடுத்த விண்ணப்பம் குடியேற்றத் துறை அதிகாரிகளால் விரிவாக ஆராயப்பட்டு நிராகரிக்கப்பட்டது” என அவர் கூறினார். அடுத்தடுத்து செய்யப்பட்ட மேல்முறையீடுகளிலும் அந்தக் கணவன் மனைவிக்கும், மூத்த குழந்தைக்கும் அளிக்கப்பட்ட அடைக்கலக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இலங்கை உள்நாட்டுப் போரில் இருந்து தப்பி அவுஸ்திரேலியா வந்த நடேசலிங்கமும், பிரியாவும் அவுஸ்திரேலியாவில் தான் திருமணமே செய்து கொண்டனர். அவர்களின் மூத்த மகள், தற்போது நான்கு வயதுள்ள கோபிகாவும், இளைய மகள், 2 வயதுள்ள தருணிகாவும் அவுஸ்திரேலியாவில் தான் பிறந்தனர்.

இவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால், இவர்களின் கடந்தகால அரசியல் தொடர்புகள் காரணமாக துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவார்கள் என்று இவர்களை ஆதரிப்பவர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தக் குடும்பம் பிலோயெலா என்ற சிறு நகரில் உழைத்து வாழ்ந்து வந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இவர்கள் பலவந்தமாக தடுப்பு மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அதிகாலை நேரத்தில் அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைக்கு கடுமையான சமூக எதிர்வினை ஏற்பட்டது. அவர்களை திரும்ப அழைக்க வேண்டும் என்ற விண்ணப்பத்தில் 1.2 லட்சம் பேர் ஒப்பம் இட்டனர்.

இதனிடையே, வெள்ளிக்கிழமை ஒரு திருப்பம் ஏற்பட்டது. இந்த தம்பதியின் இளைய மகளை நாடு கடத்துவதற்கு அடுத்த புதன்கிழமை வரை தடை விதித்து கூட்டாட்சி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் பலனை பிற குடும்ப உறுப்பினர்களுக்கும் விரிவுபடுத்த அரசு அனுமதிக்குமா என்று தெரிவியல்லை. இந்த நிலையில் குடும்பத்தைப் பிரிப்பது மிக மோசமான மனிதாபிமானமற்ற செயலாக இருக்கும் என்று வழக்குரைஞர் கரினா ஃபோர்டு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

(பிபிசி தமிழ்)

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More