Home இலங்கை மட்டக்களப்பு பாலமீன் மடுவில் வீடு புகுந்து தாக்குதல் – காவற்துறை உடன் செல்லவில்லை ஏன்?

மட்டக்களப்பு பாலமீன் மடுவில் வீடு புகுந்து தாக்குதல் – காவற்துறை உடன் செல்லவில்லை ஏன்?

by admin

மட்டக்களப்பு காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட பாலமீன்மடு பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்றிரவு ஆயுதங்களுடன் சென்ற குழுவொன்று தாக்குதல் நடாத்தியுள்ளது.

நேற்றிரவு 9.35மணியளவில் பாலமீன்மடு,புதிய எல்லை வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீதே இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

மூன்று மோட்டார் சைக்கிளில் சென்ற ஆறு பேர் கொண்ட குழுவினர் இந்த தாக்குதலை நடாத்திவிட்டு தப்பிச்சென்றதாக வீட்டின் உறவினர்கள் தெரிவித்தனர்.

வாள் மற்றும் பொல்லுகளுடன் வந்தவர்கள் வீட்டின் கேற்றினை உடைத்துக்கொண்டு உள் நுழைந்தபோது வீட்டின் உரிமையாளர்கள் வீட்டுக்குள் சென்று கதவினை மூடிய நிலையில் வீட்டின் முன்பாக தரித்து நின்ற மோட்டார் சைக்கிள்கள் இரண்டினை உடைத்து சேதப்படுத்தியுள்ளதுடன் வீட்டின் ஜன்னல்களை உடைத்து அதன் ஊடாக வாள்களை நீட்டி அச்சுறுதல் விடுத்ததாகவும் வீட்டில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பாலமீன்மடுவில் உள்ள காவற்துறைக் காவலரணில் முறையிட்டபோதும் அவர்கள் தங்களால் வரமுடியாது எனவும் மட்டக்களப்பில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று முறையிடுமாறு கூறியதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் நடைபெற்ற நீண்ட நேரத்திற்கு காவற்துறையினர் அப்பகுதிக்கு செல்லவில்லையெனவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு காவல் நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More