Home இலங்கை இனப்படுகொலையா? இல்லையா? நிலாந்தன்!

இனப்படுகொலையா? இல்லையா? நிலாந்தன்!

by admin


கடந்த வியாழக்கிழமை ஆறாந்திகதி கனடாவின் ஒன்ராறியோ நாடாளுமன்றம் ஈழத்தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் வாரத்தைப் பிரகடனப்படுத்தியிருக்கிறது.அதாவது நடந்தது இனப்படுகொலை என்று கூறுகிறது.


கடந்த மாதம் 24ஆம் திகதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆர்மீனிய இனப்படுகொலை குறித்து ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தார். 1915ஆம்ஆண்டு ஏப்ரல்24இலிருந்து தொடக்கி சுமார் பதினைந்து இலட்சம் ஆர்மீனியர்கள் துருக்கிய ஒட்டோமன் பேரரசால் கொல்லப்பட்டார்கள்,அல்லது பலவந்தமாக நாடுகடத்தப்பட்டார்கள்.சுமார் ஒரு நூற்றாண்டின் பின் அமெரிக்கா அதை ஓர் இனப்படுகொலை என்று இப்பொழுது அறிவித்திருக்கிறது.சில ஆண்டுகளுக்கு முன் ஜேர்மனி அவ்வாறு அறிவித்திருந்தது.இதுவரையிலும் மொத்தம் 29நாடுகள் அதை இனப்படுகொலை என்று ஏற்றுக்கொண்டுள்ளன.

கடந்த நூற்றாண்டின் முதலாவது இனப்படுகொலை ஆர்மீனிய இனப்படுகொலை.இந்த நூற்றாண்டின் முதலாவது இனப்படுகொலை ஈழத்தமிழ் இனப்படுகொலை என்று அழைக்கப்படுகிறது.ஆனால் அமெரிக்காவின் முன்னாள் அதிபரும் ஜோ பைடனுக்கு கொள்கை ரீதியாக நெருக்கமானவர் என்றும் கருதப்படும் ஒபாமா அண்மையில் தான் வெளியிட்ட நூலில் ஈழத்தில் இடம்பெற்றது இனப்படுகொலை என்று அழைக்கவில்லை.

மாறாக அதை மனித சங்காரம் என்று அழைத்திருக்கிறார்.
அது இனப்படுகொலைதான் என்று தமிழக சட்டசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.வடமாகாணசபையும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறது. பெருந்தமிழ்ப்பரப்பில் உள்ள ஆகப்பெரிய சட்டசபையான தமிழக சட்டசபையின் தீர்மானம் அது.எட்டுகோடி மக்களின் ஆணையைப் பெற்ற ஒரு சட்டசபையால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்துக்கும் மக்கள்ஆணை உண்டு.அதைப் போன்றே வடமாகாணசபையும் ஏகமனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. இதுதவிர கனடாவில் உள்ள பிரம்டன் உள்ளூராட்சி சபையிலும் இவ்வாறான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.


இவையாவும் தமிழ்த்தரப்புகளால் முன்கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள். இவை தவிர இந்திராகாந்தி 1983ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் இலங்கைத் தீவில் நடப்பது இனப்படுகொலை என்று கூறினார். 83கறுப்பு ஜூலைக்குப் பின் ஒகஸ்ற் மாதம் 16ஆம் திகதி இந்திய நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரையில்…”இலங்கைத்தீவில் என்ன நடக்கிறது என்றால் அது இனப்படுகொலை தவிர வேறு எதுவுமில்லை “ என்று இந்திரா காந்தி கூறினார்.


இதுதவிர, உலகில் உள்ள வேறு எந்த ஒரு நாட்டின் உத்தியோகபூர்வ குறிப்பிலும் நடந்தது இனப்படுகொலை என்று குறிப்பிடப் படவில்லை. இதுவரை நிறைவேற்றபட்ட எந்த ஒரு ஐநா தீர்மானத்திலும் இனப்படுகொலை என்ற வார்த்தை இல்லை.கடந்த 12 ஆண்டுகளில் ஐநா இதுவரையிலும் எட்டு தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறது.இந்த எல்லா தீர்மானங்களிலும் போர்க் குற்றங்கள் மனிதகுலத்துக்கு எதிரான குற்றச்செயல்கள் போன்றவைதான் கூறப்பட்டுள்ளன. அதுபோலவே ஐநா மனித உரிமைகள் ஆணையர்களின் கடுமையான அறிக்கைகளிலும் இனப்படுகொலை என்ற வார்த்தை கிடையாது.

போர்க்குற்றங்கள் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் போன்றவைகளை உண்டு. ஐநாவின் சிறப்பு தூதுவர்களின் அறிக்கைகளிலும் அப்படித்தான். அதாவது இலங்கைதீவில் நடந்தது இனப்படுகொலை என்பதனை தனது எந்தவோர் உத்தியோகபூர்வ அறிக்கையிலும் ஐநா ஏற்றுக் கொள்ளவில்லை. இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஐநா அதிகாரிகள் அதை இனப்படுகொலை என்று நிரூபிப்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்கள். அதைத்தான் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனும் கூறுகிறார்.


கடந்த ஜனவரி மாதம் மூன்று தமிழ் கட்சிகளும் இணைந்து ஜெனிவாவுக்கு ஒரு கூட்டு கடிதத்தை அனுப்பின. அக்கடிதத்தை உருவாக்கும் சந்திப்புகளின்போது கிளிநொச்சியில் நடந்த கடைசிச்சந்திப்பில் சுமந்திரன் நடந்தது இனப்படுகொலை என்பதை ஏற்றுக் கொள்வதாகச் சொன்னார்.ஆனால் ஐநா தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின் அவர் அது இனப்படுகொலை என்பதை நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் தேவை என்று கூறுகிறார்.
இந்த இடத்தில் சில முக்கியமான கேள்விகளை கேட்க வேண்டும். முதலாவது கேள்வி ஐநா போன்ற உலகப் பொதுமன்றங்கள் அதை இனப்படுகொலை என்று ஏன் அழைக்க தயங்குகின்றன?

இரண்டாவது கேள்வி தமிழ்மக்கள் அதற்கு வேண்டிய ஆதாரங்களை திரட்டி கொடுத்தாலும் ஐநா இனப்படுகொலை என்று அழைக்குமா? அதாவது ஐநாவின் நீதி ஒரு தூய நீதியா அல்லது அரசுகளின் நீதியா? மூன்றாவது கேள்வி அவ்வாறான ஆதாரங்கள் திரட்டுவதற்கு தமிழ் மக்கள் மத்தியில் உள்ள கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் எவ்வாறான கட்டமைப்புகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்?இதுவிடயத்தில் கடந்த 12ஆண்டுகளில் அவர்கள் என்னென்ன நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதனை வெளிப்படையாக கூற முடியுமா?


இக்கேள்விகளுக்கான விடைகளை சற்று ஆழமாகத் தேடுவோம். ஐநா அதனை ஏன் இனப்படுகொலை என்று அழைக்கவில்லை?அதை மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் போர்க்குற்றங்கள் என்ற வகைக்குள் அடக்க காரணம் என்ன காரணம்?காரணம் மிகவும் எளிமையானது.அதை இனப்படுகொலை என்று சொன்னால் அது இலங்கை அரசுக்கு எதிரானதாகும். அது இலங்கை அரசின் கொள்கையாக இருந்தது என்பதை ஏற்றுக் கொண்டால் அதன் விளைவாக அரசை தண்டிக்க வேண்டியிருக்கும்.ஏனெனில் இனப்படுகொலை எனப்படுவது ஒரு இனம் இன்னொரு இனத்துக்கு எதிராக புரிவது. அவ்வாறு ஒரு இனம் அதிலும் குறிப்பாக அரசுடைய பெரிய இனம் தனது அரசவளங்களையும் கட்டமைப்புகளையும் இன்னொரு சிறிய இனத்துக்கு எதிராக திட்டமிட்டு பயன்படுத்தியது என்பதனை நிரூபிக்க வேண்டியிருக்கும்.அவ்வாறு நிரூபிக்கப்பட்டால் அதற்காக அந்த அரசை தண்டிப்பதே பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் நீதியாக இருக்கும். அதைத்தான் தமிழ் மக்கள் பரிகாரநீதி என்று அழைக்கிறார்கள்.அதாவது இனப்படுகொலைக்கு எதிரான நீதியே இனப்பிரச்சினைக்குரிய பரிகாரமும் ஆகும் என்ற அடிப்படையில் அவ்வாறு கூறப்படுகிறது.


ஆனால் ஐநா ஈழத்தமிழர்களுக்கு பரிகார நீதியை வழங்க தயாரில்லை. அதாவது இலங்கை அரசை விசாரித்து உரிய நீதியை வழங்கத் தயாரில்லை. இவ்வாறு ஈழத்தமிழர்களுக்கு பரிகாரநீதியை வழங்கத் தயாரற்ற அல்லது இலங்கையில் யுத்தத்தில் வென்றவர்களை விசாரிக்கத் தயாரற்ற உலகம் ஈழத்தமிழர்களுக்கு வழங்கியதுதான் நிலைமாறுகாலநீதி ஆகும். நிலைமாறுகால நீதி என்பது இந்த உலகம் தமிழ்மக்களுக்கு வழங்கக்கூடிய நீதியில் இருக்கக்கூடிய வரையறைகளை உணர்த்துவது. இன்னொரு விதத்தில் அது ஐநாவின் இயலாமையை உணர்த்துகிறது. இதை இன்னும் ஆழமாக பார்க்கலாம்.


நிலைமாறுகாலநீதி எனப்படுவது யுத்தத்தில் ஈடுபட்ட இரண்டு தரப்புகளையும் குற்றவாளிகளாக காண்கிறது.இரண்டு தரப்பும் இழைத்த குற்றங்கள் என்றுதான் ஐநாவின் எல்லா அறிக்கைகளிலும் தீர்மானங்களிலும் காணப்படுகின்றன.போர்க்குற்றங்கள் தொடர்பில் இரண்டு தரப்பையும் விசாரிக்க வேண்டும் என்று ஐநா தீர்மானங்கள் கேட்கின்றன.ஆனால் இனப்படுகொலை என்று கூறினால் அதில் குறிப்பாக இலங்கை அரசாங்கத்தை விசாரித்து அதற்கு உரிய நீதியை வழங்க வேண்டியிருக்கும். ஐநா அதை தவிர்க்கிறது. ஏனென்றால் ஐநாவும் உட்பட உலகசமூகம் இலங்கைத்தீவில் வெற்றி பெற்றவர்களை விசாரிப்பதற்கு தயாரில்லை.


இலங்கைத்தீவில் மட்டுமல்ல உலகம் பூராகவும் இதுதான் பெரும் போக்கு ஆகும்.நிலைமாறுகால நீதியின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் இரண்டாம் உலகமகா யுத்தத்தின் பின் நூறெம்பேர்க் தீர்ப்பாயத்தில் இருந்து தொடங்கி தற்பொழுது நடைபெற்றுவரும் கம்போடியாவின் சிறப்பு தீர்ப்பாயங்கள் போன்றவை வரையிலும் ஐநா வென்றவர்களை விசாரிக்க இயலாத ஒரு கட்டமைப்பாகவே காணப்படுகிறது.இலங்கைத்தீவை பொறுத்தவரையிலும் கடந்த 12 ஆண்டுகளாக ஒன்றில் வென்றவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள். அல்லது வெற்றியை பாதுகாக்கும் ரணில் மைத்திரி போன்றவர்கள் ஆட்சிக்கு வருகிறார்கள்.எனவே யுத்த வெற்றியைக் கொண்டாடுவது பாதுகாப்பது என்பது இலங்கைத்தீவின் மாறாத அரசுக் கொள்கையாக இருக்கிறது.யுத்த வெற்றியை பாதுகாத்துக் கொண்டு யுத்த குற்றங்களை எப்படி விசாரிப்பது? இனப்படுகொலையை எப்படி விசாரிப்பது?


இதுதான் பிரச்சினை. எனவே உலக சமூகம் குறிப்பாக ஐநா வெற்றி பெற்றவர்களை விசாரிக்கத் தயாராக இல்லாத காரணத்தால் ஈழத்தமிழர்களுக்கு வழங்க முன்வந்த ஒரு தீர்வுதான் நிலைமாறுகால நீதி. அந்த நிலைமாறுகால நீதியை நோக்கித்தான் ஐநாவின் அனைத்து தீர்மானங்களும் ஐநா மனித உரிமைகள் ஆணையர்கள் மற்றும் சிறப்பு தூதுவர்களின் அறிக்கைகளும் வெளிவந்திருக்கின்றன.இது முதலாவது விடயம்.


இரண்டாவது விடயம் ஈழத்தமிழர்கள் அதற்குரிய ஆதாரங்களை தொகுத்து கொடுத்தால் ஐநா அதை இனப்படுகொலை என்று ஏற்றுக் கொள்ளுமா?என்பது. இல்லை. ஏனென்றால் ஐநாவின் நீதி என்பது ஓர் அரசியல் நீதிதான்.அது தூயநீதி அல்ல. நிலைமாறுகால நீதியோ அல்லது பரிகார நீதியோ எதுவானாலும் அவை அரசியல் நீதிகள்தான். அரசியல் நீதி என்றால் அவை அரசுகளால் வழங்கப்படும் நீதிகள் என்று அர்த்தம். அரசுகள் அதற்கொரு அரசியல் தீர்மானத்தை எடுக்கவேண்டும்.அரசுகள் எப்பொழுதும் அரசுகளை பாதுகாக்கும்.அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்புசார் ராணுவ பொருளாதார நலன்களின் அடிப்படையில் நீதி வழங்கப்படும். அதனால்தான் அரசுகளின் நீதி என்பது தூய நீதியாக இருப்பதில்லை. அது ஓர் அரசியல் நீதி. இலங்கை தீவை பொறுத்தவரையிலும் அரசுகளின் நீதி என்பது நிலைமாறுகால நீதிதான். இது விடயத்தில் ஈழத்தமிழர்கள் எவ்வளவு ஆதாரங்களை திரட்டிக் கொடுத்தாலும் ஐநா அது இனப்படுகொலைதான் என்று ஓர் அரசியல் தீர்மானத்தை எடுக்கவேண்டும்.


சீனாவின் பட்டுப் பாதை திட்டத்துக்கும் அமெரிக்காவின் இந்தோ பசுபிக் திட்டத்துக்கும் இடையில் ஏற்படக்கூடிய மோதல்களின் விளைவாக ஒரு கட்டத்தில் சீனச் சார்பு இலங்கை அரசாங்கத்தை தண்டிப்பது என்று மேற்கு நாடுகளும் இந்தியாவும் முடிவெடுத்தால் சில சமயம் நடந்தது இனப்படுகொலையே என்றுகூறி அடுத்த கட்டத்துக்குப் போகக்கூடும்.இல்லையென்றால் எவ்வளவு ஆதாரங்களை திரட்டினாலும் ஐநா அதை இனப்படுகொலை என்று உடனடிக்கு ஏற்றுக்கொள்ளாது. சிலவேளைகளில் சுயாதீன தீர்ப்பாயங்கள் அதை ஏற்றுக் கொள்ளக்கூடும். இது இரண்டாவது.
மூன்றாவது இதுவிடயத்தில் கடந்த 12 ஆண்டுகளாக தமிழ் கட்சிகள் என்ன செய்திருக்கின்றன என்பது.இதுவரை ஐநா வெளியிட்ட சில ஆவணங்களைத் தயாரிப்பதற்கு சில தமிழ் கட்சிகளின் தலைவர்களும் செயற்பாட்டாளர்களும் ரகசியமாக உழைத்திருக்கிறார்கள்.நேரடியாக சாட்சியங்களை வழங்கியிருக்கிறார்கள்.அந்த அளவிற்கு அவர்களின் பங்களிப்பு இருந்திருக்கிறது.அதற்கும் அப்பால் சாட்சிகளையும் சான்றுகளையும் தரவுகளையும் தொகுக்கும் விதத்தில் வெளிப்படையான கட்டமைப்பை எதுவும் எந்தக் கட்சியிடமும் கிடையாது.


உலகளாவிய அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் எதனையும் தமிழ் கட்சிகள் ஏன் அணுகவில்லை என்ற கேள்வியும் முக்கியம். இதுதொடர்பில் Human rights Data Analysis Group-(HRDAG) என்று அழைக்கப்படும் மனித உரிமைகள் தகவல் ஆய்வு அமைப்பு என்ற ஓர் அமைப்பை தமிழ் கட்சிகள் அணுகியிருக்கலாம்.. மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டமன்றம் அக்கோரிக்கையை முன்வைக்கலாம் அந்த அமைப்பு 1996ஆம் ஆண்டு ஜேவிபியின் இரண்டாவது கிளர்ச்சிக்குப்பின் இலங்கைத்தீவில் மனித உரிமைகள் இல்லம் என்ற ஓர் மனித உரிமைகள் அமைப்போடு இணைந்து சிறிதுகாலம் செயற்பட்டிருக்கிறது. நிலைமாறுகாலநீதி தொடர்பான கருத்தரங்குகளின் போது இது தொடர்பில் தெரிவிக்கபட்ட கருத்துக்களால் கவரப்பட்டு கிளிநொச்சி பிரதேச சபையும் பளை பிரதேச சபையும் அவ்வாறு மனித உரிமைகள் தகவல் ஆய்வு அமைப்பை அழைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றின. ஆனால் அவை இரண்டும் அதிகார பலம் குறைந்த சிறிய உள்ளூராட்சி சபைகளே.


தமிழ் கட்சிகளில் முதன்மை பொறுப்புகளில் இருக்கும் பலர் சட்டத்துறையைச் சேர்ந்தவர்கள். ஆனால் இது விடயத்தில் அவர்கள் புதிய கட்டமைப்புகளை உருவாக்க தவறிவிட்டார்கள். அரசியல் கைதிகளின் விடுதலைக்காக ஒரு பொதுக்கட்டமைப்பை உருவாக்கத் தயாரற்ற தமிழ் அரசியல்வாதிகளிடம் அப்படி எதிர்பார்ப்பதும் தவறுதான்.


இவ்வாறான ஒரு தோல்விகரமான பின்னணியில் கடந்த ஜனவரி மாதம் வவுனியாவில் மூன்று கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் பணிகளின்போது ஒரு கட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் சொன்னார்……அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு விவகாரத்தை எடுத்துச்செல்லும் வழிமுறைகளை பகிரங்கப்படுத்த முடியாது என்று.சில விடயங்களை வெளிப்படையாகச் சொல்லிச் செய்வது புத்திசாலித்தனமானது அல்ல என்று.உண்மை. தகவல் திரட்டும் வழிமுறைகளை இலங்கை அரசாங்கம் நாட்டுக்கு எதிரானதாகவே பார்க்கும்.அதை பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டு நசுக்கப்பார்க்கும். இது விளங்கிக் கொள்ளக் கூடியதே.

ஆனால் எவ்வளவு தகவல்களை திரட்டினாலும் அரசுகளின் நீதியை தீர்மானிக்கப் போவது தகவல்கள் மட்டும் அல்ல.நலன்சார் உறவுகளின் அடிப்படையிலான பேரங்கள்தான். அவ்வாறு அரசுகளை நோக்கி லொபி செய்யவேண்டிய கட்டமைப்புகளை ஏன் இதுவரையிலும் எந்த ஒரு கட்சியும் உருவாக்கியிருக்கவில்லை ?
இப்பொழுது கடைசியாக வந்த ஐநா தீர்மானம் தகவல்களை திரட்டும் ஒரு பொறிமுறைக்கான பரிந்துரையை முன்வைக்கின்றது. வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து அப்பொறிமுறை இயங்கத் தொடங்கும். தனக்கு எதிரான தகவல்களை திரட்டும் ஒரு பொறிமுறையை இலங்கை அரசாங்கம் நாட்டுக்குள் அனுமதிக்குமா?அப்படி அனுமதிக்காவிட்டால் ரகசியமான வழிவகைகள் ஊடாக உயர்தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தகவல்களை திரட்ட வேண்டியிருக்கும்.

இதற்கு முன் 2015ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையும் அவ்வாறு நாட்டுக்கு வெளியில் இருந்து திரட்டப்பட்ட ஒன்றுதான். எனவே இப்பொறிமுறையானது அதிகபட்சம் புலம்பெயர்ந்த தமிழ் தரப்பில்தான் தங்கியிருக்கும்.இதை முன்னுணர்ந்துதான் இலங்கை அரசாங்கம் புலம்பெயர்ந்த தமிழ் தரப்பில் உள்ள அமைப்புகள் சிலவற்றையும் தனி நபர்களையும் தடை செய்திருக்கிறது.


இப்பொறிமுறை இயங்கத் தொடங்கும் பொழுது அதில் உங்களுடைய பங்களிப்பு எப்படி இருக்கும் என்று யு டிவியின் ஊடகவியலாளர் சுமந்திரனை கேட்டபோது சுமந்திரன் வவுனியாவில் வைத்து கஜேந்திரகுமார் சொன்ன அதே பதிலைத்தான் கூறியிருக்கிறார். அவ்வாறான நடவடிக்கைகளை பகிரங்கமாக கூற முடியாது என்று. இனப்படுகொலை என்பதனை நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் போதாது என்று கூறும் அவரே அந்த ஆதாரங்களை திரட்டும் நடவடிக்கைகளை பகிரங்கமாக கூற முடியாது என்றும் கூறுகிறார்.


இனப்படுகொலை என்று நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் போதாது என்பது ஐநாவின் நிலைப்பாடு. ஆனால் சுமந்திரன் ஐநாவின் பிரதிநிதி அல்ல. தமிழ் மக்களின் பிரதிநிதி. தமிழ் மக்களின் ஆணையைப் பெற்ற அவருடைய கட்சிக்கு ஒரு பொறுப்பு உண்டு. கடந்த 12 ஆண்டுகளாக குறிப்பாக கடந்த ஆறு ஆண்டு காலப்பகுதிக்குள் நிலைமாறுகால நீதியின் பங்காளியாக இருந்தபோது சான்றுகளையும் சாட்சியங்களையும் திரட்டுவதற்காக கூட்டமைப்பு என்னென்ன முயற்சிகளை முன்னெடுத்தது என்பதனை அவருடைய கட்சி பகிரங்கப்படுத்துமா? அது ஒரு ரகசிய நடவடிக்கை அதை பகிரங்கப்படுத்த முடியாது என்று கூறுவதன் மூலம் தாங்கள் ஏன் இதுவரையிலும் இனப்படுகொலை என்று நிறுவத் தேவையான சான்றுகளை திரட்டவில்லை என்ற கேள்விக்கான பதிலை கூறுவதிலிருந்து அக்கட்சி தப்ப முயற்சிக்கின்றதா? அதேசமயம் பொறுப்புக்கூறலை மனித உரிமைகள் பேரவைக்கு வெளியே கொண்டுபோக வேண்டும் விசாரணைகளை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்த வேண்டும் என்று கேட்கும் கஜேந்திரகுமாரைப் போன்ற கட்சித்தலைவர்களுக்கு இது விடயத்தில் கடந்த ஜனவரி மாதம் 15ஆம் திகதி ஜெனிவாவுக்கு எழுதிய கடிதத்தின் தொடர்ச்சியாக தாங்கள் விசுவாசமாக உழைத்து வருகிறார்கள் என்பதனை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு உண்டு.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More