Home இலங்கை யாழ்.பல்கலையின் 35வது பட்டமளிப்பு விழா

யாழ்.பல்கலையின் 35வது பட்டமளிப்பு விழா

by admin

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி பல்கலைக்கழகத்தின் உள்ளக விளையாட்டரங்கில் யாழ். பல்கலைக்கழக வேந்தர் தகைசார் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் தலைமையில் நடைபெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி, இன்றைய தினம் வியாழக்கிழமை ஆரம்பமாகி நாளை  வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய தினங்களில்  பல்கலைக் கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறும்.


இன்றும் நாளையும் தலா மூன்று அமர்வுகளும், மூன்றாம் நாள் சனிக்கிழமை  இரண்டு அமர்வுகளுமாக இடம்பெறவுள்ள இந்தப் பட்டமளிப்பு விழாவில் 2 ஆயிரத்து 619 பேர் பட்டங்களைப் பெறுகின்றனர். 


நாட்டில் தற்போது நிலவும் கொரோனாப் பெருந்தொற்றுச் சூழ்நிலைகளைக் கருத்திற் கொண்டு  கடந்த 2021 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 7 ஆம் திகதி நிகழ்நிலையில் பட்டங்கள் வழங்கப்பட்ட பட்டதாரிகளுக்கு வேந்தர் அவர்கள் சம்பிரதாய பூர்வமாக இந்தப் பட்டமளிப்பு விழாவில் பட்டங்களும், பட்டப்பின் தகைமைச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டமையை உறுதி செய்வார். 
உயர் பட்டப் படிப்புகள் பீடம், கலைப்பீடம், பொறியியல் பீடம், விஞ்ஞான பீடம், விவசாய பீடம், முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடம்,  மருத்துவ பீடம், தொழில் நுட்ப பீடம், இணைந்த சுகாதார விஞ்ஞான பீடம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை (தற்போதைய வவுனியாப் பல்கலைக்கழகத்தை)ச் சேர்ந்த வியாபாரக் கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞான பீடம் ஆகியவற்றைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கும் இந்த பட்டமளிப்பு விழாவில் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.  


இந்தப் பட்டமளிப்பு விழாவில் 238 பட்டப்பின் தகைமை பெற்றவர் களுக்கும், 1, 795 உள்வாரி மாணவர்களுக்கும்,   585 தொலைக்கல்வி  மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.  உயர் பட்டப்படிப்புகள் பீடத்தில் இருந்து 238 பேர் பட்டப்பின் தகைமைகளைப் பெறவுள்ளனர். அவர்களில் கலாநிதிப் பட்டத்தை 04 பேரும், முதுமெய்யியல்மாணிப் பட்டத்தை 16 பேரும், சைவ சித்தாந்தத்தில் முதுகலை மாணிப் பட்டத்தை 31 பேரும், முது வியாபார நிருவாக மாணிப் பட்டத்தை 47 பேரும்,  சூழல் முகாமைத்துவத்தில் முதுவிஞ்ஞானமாணிப் பட்டத்தை 14 பேரும், முதுகல்வியியல்மாணிப் பட்டத்தை 101 பேரும், பண்பாட்டியலில் முதுகலைமாணிப் பட்டத்தை 10 பேரும், முகாமைத்துவத்தில் பட்டப் பின் தகைமைச் சான்றிதழை 02 பேரும், நூலகத் தகவல் விஞ்ஞானத்தில் பட்டப் பின் தகைமைச் சான்றிதழை 13 பேரும் பெறுகின்றனர்.
உள்வாரியாக, மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 131 பேர் மருத்துவமாணி சத்திர சிகிச்சை மாணிப் பட்டத்தையும், விவசாய பீடத்தைச் சேர்ந்த 65 பேர் விவசாயத்தில் விஞ்ஞானமாணி சிறப்புப் பட்டத்தையும், பொறியியல் பீடத்தைச் சேர்ந்த 55 பேர் பொறியியல் விஞ்ஞான மாணி சிறப்புப் பட்டத்தையும் பெறுகின்றனர்.


கலைப்பீடத்தைச் சேர்ந்த 52 பேர் சட்டமாணிப் பட்டத்தையும், 309 பேர்  சிறப்புக் கலைமாணி பட்டத்தையும், 15 பேர் மொழிபெயர்ப்புக் கற்கையில் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தையும் ,02 பேர்   கலைமாணி பொதுப் பட்டத்தையு ம் பெறவுள்ளனர்.  மேலும், 63 பேர் நுண்கலைமாணி (நடனம் – பரதம் ) பட்டத்தையும், 56 பேர் நுண்கலைமாணி (சங்கீதம்) பட்டத்தையும், 20 பேர் நுண்கலைமாணி ( சித்;திரமும், வடிவமைப்பும்) பட்டத்தையும் பெறுகின்றனர்.  இவர்களுடன், சித்த மருத்துவ அலகைச் சேர்ந்த 38 பேர் சித்த வைத்திய சத்திரசிகிச்சைமாணி பட்டத்தையும் பெறுகின்றனர்.
இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த 24 பேர் தாதியியலில் சிறப்பு விஞ்ஞானமாணி பட்டத்தையும், 15 பேர் மருந்தகவியல்மாணி சிறப்புப் பட்டத்தையும், 18 பேர் மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானத்தில் விஞ்ஞானமாணி சிறப்புப் பட்டத்தையும் பெற்றுக் கொள்கின்றனர்.  விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த 174 பேர் விஞ்ஞானமாணி பொதுப் பட்டத்தையும், ஒருவர் மீன்பிடியியல் விஞ்ஞானத்தில் தகைமைச் சான்றிதழையும் பெறுகின்றனர்.


இவர்களுடன் , முகாமைத்துவ கற்கைகள்  மற்றும்  வணிக பீடத்தில் இருந்து வியாபார நிருவாக மாணி (சிறப்பு) பட்டத்தை 246 பேரும், வியாபார நிருவாக மாணிப் பட்டத்தை 08 பேரும், வியாபார நிருவாக மாணி பொதுப் பட்டத்தை 12 பேரும், வணிகமாணிப் பட்டத்தை 72 பேரும் பெறுகின்றனர்.அத்துடன், தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த 88 பேர் பொறியியல் தொழில்நுட்பமாணி (சிறப்பு) பட்டத்தையும், 77 பேர்  உயிர்முறைமைகள் தொழில் நுட்பமாணி (சிறப்புப்) பட்டத்தையும் பெறுகின்றனர்.  


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னை நாள் வவுனியா வளாக (தற்போதைய வவுனியாப் பல்கலைக்கழக) த்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த 27 பேர் தகவல், தொடர்பாடல் தொழில் நுட்பத்தில் விஞ்ஞானமாணி (சிறப்பு) பட்டத்தையும், 06 பேர் சூழல் விஞ்ஞானத்தில் விஞ்ஞானமாணி சிறப்புப் பட்டத்தையும், 06 பேர் கணினி விஞ்ஞானத்தில் விஞ்ஞானமாணி சிறப்புப் பட்டத்தையும், 41 பேர் தகவல் தொழில்நுட்பத்தில் விஞ்ஞானமாணி பொதுப் பட்டத்தையும், 23 பேர் கணினி மற்றும் பிரயோக கணிதம் கணிப்பிடலில் விஞ்ஞானமாணி பொதுப் பட்டத்தையும், 13 பேர் சூழல் விஞ்ஞானத்தில் விஞ்ஞானமாணி பொதுப் பட்டத்தையும் பெற்றுக் கொள்கின்றனர். மேலும், அதன் வியாபார கற்கைகள் பீடத்தைச் சேர்ந்த 34 பேர் செயற்றிட்ட முகாமைத்துவத்தில் வியாபார முகாமைத்துவமாணி பட்டத்தையும், 80 பேர் வியாபார முகாமைத்துவமாணி (சிறப்பு) பட்டத்தையும், 25 பேர் வியாபார முகாமைத்துவமாணி (பொது) பட்டத்தையும் பெறுகின்றனர்.


  இவர்களுடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் கல்வி கற்று வெளியேறிய 146 பேர் வியாபார முகாமைத்துவமாணி பட்டத்தையும், 63 பேர் வணிகமாணிப் பட்டத்தையும், 370 பேர் கலைமாணிப் பட்டத்தையும், ஒருவர்  சங்கீதமாணிப் பட்டத்தையும், 05 பேர் நடனமாணிப் பட்டத்தையும் பெற்றுக் கொள்கின்றனர்.  

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More