யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மருத்துவ கழிவுகளை அரியாலை பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் எரியூட்டப்பட்ட வந்த நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை அப்பகுதி மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட அரியாலை சித்துப்பாத்தி மயானத்தின் பின்புறத்தில் சட்டவிரோதமான முறையில் இவ்வாறு மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு எரியூட்டப்பட்டதுடன் , பாரியளவிலான கிடங்குகள் வெட்டப்பட்டு அவற்றுக்குள் புதைக்கப்பட்டன.
அத்தனையும் அரியாலை மக்கள் கண்டறிந்து அதற்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்ததை அடுத்து , அங்கிருந்து அந்த கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டன.
அந்நிலையில் இந்த காணிக்குள் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டதனை பார்க்கையில் , மயானத்திற்குள் கழிவுகளை கொட்டியமைக்கு எதிர்ப்பு கிளம்பிய நாள் முதல் இந்த காணிக்குள் கொட்ட தொடங்கியுள்ளனர் என அப்பகுதி மக்கள் சந்தேகம் கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.