Home இந்தியாஇந்தியாவின் அடையாள அட்டைத் திட்டத்தைச் செயற்படுத்த இலங்கைத் தலைவர்கள் இணக்கம்

இந்தியாவின் அடையாள அட்டைத் திட்டத்தைச் செயற்படுத்த இலங்கைத் தலைவர்கள் இணக்கம்

by editorenglish

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அண்மைய இந்திய விஜயமானது மக்களை மையமாகக் கொண்ட இந்திய உதவியுடனான டிஜிட்டல் மயமாக்கலுக்கு மேலும் உறுதி அளித்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.

இந்திய உதவியுடன் 300 கோடி ரூபா மதிப்பிலான தனித்துவமான டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கும் திட்டத்தைச் செயற்படுத்துவதை விரைவுபடுத்துவதற்கு இலங்கைத் தலைவர்கள் இணக்கம் தெரிவித்ததாக‌ இந்திய உயர்ஸ்தானிகர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை அன்று இடம்பெற்ற பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகள் வர்த்தகம், முதலீடு, அபிவிருத்தி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், பாதுகாப்பு, விவசாயம், உணவுப் பாதுகாப்பு, மக்களிடையே தொடர்பு, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் இணைப்பு உள்ளிட்ட துறைகளில் கூட்டு ஒத்துழைப்பு நோக்கங்களை ஆராய்ந்து வருகின்றன. கடந்த பத்தாண்டுகளில் இந்தியா வேகமாக டிஜிட்டல் மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது.

டிஜிட்டல் மயமாக்கலை இணைப்புக்கான வழிமுறையாக மட்டுமல்லாமல் – சமத்துவம் மற்றும் வாய்ப்புக்கான ஊடகமாகவும் இந்தியா ஏற்றுக்கொண்டது. அதுவே எமது டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பின் சாராம்சமாகும்.

இந்தியா இன்று அதன் 1.3 பில்லியன் மக்களுக்கு டிஜிட்டல் அட்டைகளை வழங்கியுள்ளது. எம்மத்தியில் 1.2 பில்லியன் நவீன கையடக்க தொலைபேசி பயனர்கள், 950 மில்லியன் இணைய பயனர்கள் உள்ளனர்.

உலகின் நிகழ்நேர டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 40 சதவீதம் இந்தியாவில் நடைபெறுகிறது. கடந்த பத்தாண்டுகளில், பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரத்தை விட எட்டு மடங்கு அதிகமான ஒப்டிகல் பைபர்களை இந்தியா அமைத்துள்ளது.

அந்த வகையில் முழு பிராந்தியத்துக்கும் வாய்ப்புகள் மற்றும் சாத்தியக்கூறுகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான  விரைவான வழிமுறைகளைப் பின்பற்றுவதற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அண்மைய‌ இந்திய விஜயமானது இந்த மிக முக்கியமான ஒத்துழைப்புத் தூணான மக்களை மையமாகக் கொண்ட டிஜிட்டல் மயமாக்கலுக்கு மேலும் உத்வேகத்தை அளித்தது.

இந்திய உதவியுடன் 300 கோடி ரூபா மதிப்பிலான தனித்துவமான டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை செயற்படுத்துவதை விரைவுபடுத்த இலங்கைத் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த கூட்டுப் பணிக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் டிஜிலொக்கரை செயல்படுத்துவது குறித்த தொழில்நுட்ப கலந்துரையாடல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டணங்களை எளிதாக்குவதற்காக கடந்த ஆண்டு இலங்கையில் யு.பி.ஐ. கொடுப்பனவுகள் ஆரம்பிக்கப்பட்டன.

இரு நாடுகளின் நலனுக்காக யு.பி.ஐ. டிஜிட்டல் கொடுப்பனவுகளின் பயன்பாட்டை விரிவுபடுத்துவது குறித்து தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

எமது ஒவ்வொரு நாடுகளின் டிஜிட்டல் பயணங்களுக்கும் உத்வேகமளிக்கவும், பிம்ஸ்டெக் பிராந்தியத்துக்கான முன்னேற்றத்துக்கான புதிய பாதைகளை மேலும் திறக்கவும் இந்த தளத்தைப் பயன்படுத்துவோம் என்று நம்புகின்றோம் என்றார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More