Home இலங்கையோஷித ராஜபக்ஷவின் பணமோசடி வழக்கு: முன்னாள் காதலி யசரா அபேநாயக்க கொழும்பு உயர் நீதிமன்றில் சாட்சியம்!

யோஷித ராஜபக்ஷவின் பணமோசடி வழக்கு: முன்னாள் காதலி யசரா அபேநாயக்க கொழும்பு உயர் நீதிமன்றில் சாட்சியம்!

by admin
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள பணமோசடி வழக்கு விசாரணையில், முன்னாள் CSN ஊடக நிறுவனத்தின் தலைவியும் அவருடைய முன்னாள் காதலியுமான யசரா அபேநாயக்க கொழும்பு உயர் நீதிமன்றில் முக்கிய சாட்சியமளித்துள்ளார்.
கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி உதேஷ ரணதுங்க முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, அவர் இந்த வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்.
நீதிமன்றில் யசரா அபேநாயக்க அளித்த சாட்சியம்:
“யோஷித ராஜபக்ஷ கடற்படை அதிகாரியாகப் பணியாற்றிய காலப்பகுதியில், 2009 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை அவருடன் காதல் உறவில் இருந்தேன். திருமண நோக்கத்திற்காக நாங்கள் மோதிரமும் மாற்றிக்கொண்டோம். எனினும், ஜாதகப் பொருத்தம் இல்லை என சோதிடர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து, அந்த உறவு முடிவுக்கு வந்தது.
நாங்கள் திருமணத்திற்குப் பின்னர் குடியேறுவதற்காக, மவுன்ட் லவீனியா / தெஹிவளையில் அமைந்த மிஹிந்து மாவத்தையிலுள்ள சொகுசு வீடு தொடர்பாகத் திட்டமிட்டிருந்தோம். அந்த வீட்டின் உள்துறை அலங்கார வேலைகள் தொடர்பாகவும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், அந்த வீடு தனது பேத்திக்குச் சொந்தமானது என யோஷிதவின் பாட்டி (டெய்ஸி பொரஸ்ட்) என்னிடம் கூறியிருந்தார்.”
மேலதிக சாட்சியங்கள் மற்றும் வழக்கின் பின்னணி:
இந்த வழக்கு விசாரணையின் போது, காணி உரிமையாளரான லூசியன் ரத்நாயக்க மற்றும் யசராவின் மாமாவான வசந்த குமார ஜயசூரிய உள்ளிட்ட மேலும் மூன்று சாட்சிகள் ஆஜராகி சாட்சியமளித்தனர். குறிப்பாக, ரத்மலானை மற்றும் தெஹிவளைப் பகுதிகளில் அமைந்துள்ள காணிகளைக் கொள்வனவு செய்வதற்காக, பாதுகாப்புப் பணியாளர்கள் போன்ற தோற்றம் கொண்ட நபர்களால் பைகளில் பெருமளவிலான பணம் கொண்டு வரப்பட்டதாக வங்கிப் பரிவர்த்தனைகள் மற்றும் சொத்துக் கொள்வனவு தொடர்பான விபரங்களுடன் சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டன.
2012 மற்றும் 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில், தமது வருமான ஆதாரங்களை வெளிப்படுத்தாமல், ரத்மலானை மற்றும் தெஹிவளைப் பகுதிகளில் ரூபாய் 73.499 மில்லியன் மதிப்பிலான 5 காணி மற்றும் சொத்துக்களைக் கையகப்படுத்தியமை மற்றும் CSN ஊடக நிறுவன முதலீடுகள் ஊடாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றங்களை இழைத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சட்டமா அதிபரினால் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இவ்வழக்கின் மேலதிக விசாரணைகளை வரும் ஜூலை 17 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய திகதியில் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேலும் 13 சாட்சிகளுக்கு அழைப்பாணை (Summons) விடுத்து உத்தரவிட்டுள்ளார்.
Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More