மறைந்த தலைவர் அமரர் மாவை சேனதிராஜாவின் இறுதிச்சடங்கு நடைபெற்ற மயானத்தில் கட்சியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட மத்திய குழு உறுப்பினர்கள் 18பேரின் புகைப்படங்களுடன் கூடிய பதாகையொன்று மாவை சேனாதிராஜா அவர்களின் இறப்பிற்குக் காரணமானவர்கள் என்ற தொனிப்பட வசனம் எழுதப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இவ்வாறு அந்தப் பாதாகையைக் காட்சிப்படுத்தியத்தின் பின்னணியில் உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் பல காணப்படுகின்றன என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.சே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமது கட்சியை சிதைத்து ஓரங்கட்டுவதே அந்த சக்திகளின் பிரதான நோக்கமாக இருக்கின்றது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியதோடு, அவ்விடயம் தொடர்பில் முழுமையான விசாரணைகள் அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
யாழ்.நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் திங்கட்கிழமை (10/2/2025) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“இந்தச் சக்திகள் தமிழரசுக்கட்சியை பிளவடையச் செய்ய வேண்டும் அல்லது அரசியல் அரங்கிலிருந்து ஒதுக்க வேண்டும் என்று செயற்படுகின்ற தரப்புக்களாகும். ஆகவே இந்த விடயங்கள் சம்பந்தமாக உண்மைகள் கண்டறியப்பட்டு வெளிப்படுத்தப்படுகின்றபோது பின்னணியில் உள்ளவர்கள் அடையாளப்படுத்தப்படுவார்கள்” என அவர் மேலும் தெரிவித்தார்.

