நேற்று (21/2/2025) கொட்டாஞ்சேனைச் சந்திப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 37 வயதுடைய சசி குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள், T-56 துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
கடை ஒன்றில் இருந்தவரை இலக்காக கொண்டு இந்தத் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூடு நடத்திய இரண்டு சந்தேக நபர்களும் கிரேன்ட்பாஸ் பகுதியில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் துப்பாக்கியும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், இந்த இரு சந்தேக நபர்களும் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தித் தப்பிச் செல்ல முயன்றபோது தாம் நடத்திய பதிஉல் தாக்குதலில் இந்த இரண்டு நபர்களும் கொல்லப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். பிலியந்தலை பகுதி அருண மற்றும் மட்டக்குளி, மோதரை பகுதி விஜயகுமார் ஆகிய இந்த இரண்டு சந்தேக நபர்களே காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்த முயன்று தப்பிச்செல்ல முற்பட்டபோது பொலிஸார் நடத்திய பதில் தாக்குதலில் பலியானார்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

