198
முன்னாள் ஈரானிய இராணுவத் தளபதி காசிம் சுலைமானியின் நெருங்கிய உறவினர்கள், அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வைத்து குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவினரால் (ICE) கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் செய்தி தற்போது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெனரல் காசிம் சுலைமானியின் மருமகள் ஹமிதே சுலைமானி அஃப்சர் (Hamideh Soleimani Afshar) மற்றும் அவரது மகள் (சுலைமானியின் பேத்தி) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை சனிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டே, சமூக வலைதளங்கள் வாயிலாக அமெரிக்க வீரர்களுக்கு எதிரான தாக்குதல்களை இவர்கள் கொண்டாடியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவை “பெரிய சாத்தான்” (Great Satan) என்று விமர்சித்ததுடன், ஈரானிய புரட்சிகர காவல்படைக்கு (IRGC) ஆதரவாகப் பிரச்சாரம் செய்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
விசா ரத்து: ஈரான் ஆட்சியுடன் தொடர்புடைய வெளிநாட்டுப் பிரஜைகளின் ‘கிரீன் கார்டு’ (Green Card) அந்தஸ்தை ரத்து செய்யும் அமெரிக்காவின் புதிய கொள்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் மார்கோ ரூபியோ, இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளார். “அமெரிக்க எதிர்ப்பு பயங்கரவாத ஆட்சிகளுக்கு ஆதரவளிக்கும் வெளிநாட்டவர்களுக்கு அமெரிக்கா ஒருபோதும் அடைக்கலம் தராது” என்று அவர் தனது ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையிலான போர் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த அதிரடி கைது நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளதாகக் கருதப்படுகிறது.
மேலதிக செய்திகளுக்கு எங்களைப் பின்தொடருங்கள்.
Spread the love

