நெடுந்தீவு கடற்பரப்பில் இடம்பெற்ற கோரமான குமுதினி படகுப் படுகொலையின் 41-ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள், இன்று (2026 மே 15, வெள்ளிக்கிழமை) நெடுந்தீவு மாவிலித் துறைமுகப் பகுதியில் கண்ணீர் மல்க உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
கடந்த 1985-ஆம் ஆண்டு மே 15-ஆம் திகதி, நெடுந்தீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த குமுதினி படகில் இருந்த 36-க்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் நடுக்கடலில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டனர். அந்த வரலாற்றுச் சுவடுகளைத் தாங்கிய நினைவேந்தல் இன்று காலை 9:00 மணியளவில் ஆரம்பமானது.
அன்றைய படுகொலையில் தனது 6 மாதப் பச்சிளம் குழந்தையைப் பறிகொடுத்து, தானும் படுகாயமடைந்த நிலையில் இன்றும் அந்தப் பேரவலத்தின் சாட்சியாக வாழும் விசுவலிங்கம் அன்னலட்சுமி அவர்கள் முதன்மைச் சுடரினை ஏற்றி வைத்தார். நல்லூர் சிவகுரு ஆதீன முதல்வர் வேலன் சுவாமிகள், நெடுந்தீவு பங்குத்தந்தை பி.கமல்ராஜ் அடிகளார் மற்றும் இந்து மதகுரு கா.புவனேந்திரசர்மா ஆகியோர் கலந்துகொண்டு நினைவுச் சுடர்களை ஏற்றி வைத்தனர். குமுதினி நினைவேந்தல் குழுத் தலைவர் வி.ருத்திரன் மற்றும் வேலணை பிரதேச சபை உறுப்பினர் க.நாவலன் ஆகியோருடன் இணைந்து உயிரிழந்த உறவுகளுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நினைவேந்தல் நிகழ்வுக்கு முன்னதாக, காலை 8:15 மணியளவில் மாவிலித்துறை வீரபத்திரப்பிள்ளையார் ஆலயம் மற்றும் மாவிலித்துறை சவேரியார் ஆலயம் ஆகியவற்றில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்திக்காக விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.அத்துடன், முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு, தீவக நினைவேந்தல் குழுவினரால் அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்ட மக்களுக்கு “முள்ளிவாய்க்கால் கஞ்சி” பரிமாறப்பட்டது.
குமுதினி படுகொலை என்பது ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு வடுவாகும். 41 ஆண்டுகள் கடந்த பின்னரும், பாதிக்கப்பட்ட உறவுகளின் நீதிக்கான குரல் நெடுந்தீவு மண்ணில் ஓங்கி ஒலிப்பதைக் காண முடிந்தது. குறிப்பாக, படுகாயமடைந்து உயிர் தப்பிய அன்னலட்சுமி அவர்கள் சுடர் ஏற்றிய தருணம் சபையினரை நெகிழ வைத்தது. முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் ஒரு பகுதியாக இந்தக் குமுதினி நினைவேந்தலும் இணைந்து கொண்டமையானது, தமிழினம் சந்தித்த தொடர்ச்சியான அடக்குமுறைகளை இளைய தலைமுறையினருக்கு நினைவூட்டும் விதமாக அமைந்தது.
#KumudhiniMassacre #NeduntheevuRemembrance #May15th #MaviliPort #TamilGenocideMemorial


