45
ஈரானில் கடந்த புதன்கிழமை மற்றும் வியாழக் கிழமைகளில் அமெரிக்க இராணுவம் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் சிக்கி 17 பேர் உயிரிழந்து உள்ளதுடன், 115 பேர் காயமடைந்துள்ளதாக ஈரான் சுகாதார அமைச்சு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல் சம்பவங்கள் குறித்து ஈரான் சுகாதார அமைச்சின் பொது உறவுப்பிரிவுத் தலைவர் ஹொசைன் கெர்மன்பூர் (Hossein Kermanpour) தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் விடுத்துள்ள அறிக்கையில், காயமடைந்தவர்களில் ஒரு பெண் உட்பட 17 பேர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்டவர்களில் 14 பேருக்கு அவசர அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சிகிச்சையின் பின்னர் குணமடைந்த 102 நோயாளிகள் மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) பயணித்த வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டி, அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவின் பேரில் அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) இந்தத் தீவிரத் தாக்குதலை முன்னெடுத்திருந்தது.
இந்தத் தாக்குதலானது இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருந்த தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளதால் பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
Spread the love

