351

மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக மக்கள் போராட்டம் ஒன்று இடம் பெறலாம் என்ற அடிப்படையில் இதனால் பொதுமக்களுக்கு இடையூறாக,நஷ்டம்,தொந்தரவு ஏற்படலாம் எனத் தொிவித்து மன்னார் காவல்துறையினரால் முன் வைக்கப்பட்ட தடை உத்தரவு கோாிக்கைக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் மன்னார் நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை(17) மாலை அனுமதி வழங்கியுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனிய மணல் அகழ்வு மேற்கொள்வதற்கான அனுமதி வழங்குவதற்கு அரச திணைக்கள அதிகாரிகள் ஆய்வு செய்வதற்காக இரு முறை மன்னார் மாவட்டத்திற்கு சென்றிருந்த போதும் இரு முறையும் மக்களின் ஒன்றினைந்த எதிர்ப்பால் அரச திணைக்களங்கள் உள்ளடங்களாக சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனமும் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இவ்வாறான நிலையில் மீண்டும் குறித்த அரச திணைக்களங்கள் மற்றும் ஒரியன் மினரல் நிறுவனம் ஆய்வுக்காக மன்னார் ஓலைத்தொடுவாய் மற்றும் தோட்டவெளி பகுதிக்கு செல்ல உள்ள நிலையில் பொதுமக்கள் அணி திரண்டு போராட்டம் மேற்கொள்ள உள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் போராட்ட காரர்கள் என அடையாளப்படுத்தி சிலரின் பெயர்களை குறிப்பிட்டு பல்வேறு நிபந்தனைகளுடன் மன்னார் காவல்துறையினர் சட்டத்தரணி செல்வராஜ் டினேசன் ,அருட்தந்தை மார்கஸ் அடிகளார் உள்ளடங்களாக 10 பேருக்கு எதிராக தடையுத்தரவை பெற்றுள்ளனர்.
குறித்த தடை உத்தரவின் கீழ் மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் போராட்டம் மேற்கொள்ளாமல் இருத்தல் வேண்டும்.எந்த பொது சொத்துக்களுக்கு தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்த கூடாது .மிக முக்கியமாக மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் ஒரியன் மினரல் நிறுவனத்தின் செயல்பாட்டுக்கும் இடையூறு ஏற்படுத்த கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த நீதிமன்ற கட்டளை இன்று திங்கட்கிழமை(17 தொடக்கம் 14 நாட்களுக்கு வலுவுள்ளதாக காணப்படும் என குறித்த கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மன்னார் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கையின் போது மன்னார் மக்களுக்கு விருப்பம் இல்லாத கனிய மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்க போவதில்லை என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பகிரங்கமாக தெரிவித்த நிலையில் அவர் ஜனாதிபதியாகி ஒரு வருட காலப்பகுதிக்குள் கனிய மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்குவதற்கான கூர்ப்பு அறிக்கையை தயார் செய்வதற்கான இரண்டாவது முறை அரச திணைக்களங்கள் மன்னார் மாவட்டத்திற்கு செல்ல உள்ளமை குறிப்பிடத்தக்கது


Spread the love

