கம்பஹா பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி (NPP) உறுப்பினர்கள் மற்றும் தவிசாளருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பாரிய ஊழல் குற்றச்சாட்டுகள் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
பிரதேச சபையின் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று (07) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், தற்போதைய நிர்வாகம் மக்களின் நம்பிக்கையைத் துஷ்பிரயோகம் செய்வதாகக் கடுமையாகச் சாடியுள்ளனர்.
முன்வைக்கப்பட்டுள்ள பிரதான குற்றச்சாட்டுகளாக
அசோக குமார மற்றும் தர்மவன்ச ஆகிய உறுப்பினர்கள் தமது பெயரில் அரசாங்க ஒப்பந்தங்களை மேற்கொண்டு சட்டவிரோதமாக பணம் பெற்றுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும் சஹன் பிரசாத் என்ற உறுப்பினர் ‘பெக்கோ’ (Backhoe) இயந்திரங்களைப் பயன்படுத்திச் சபையின் நிதியைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைகள் கட்டளைச் சட்டத்தின்படி, ஒரு உறுப்பினர் சபையுடன் நேரடி ஒப்பந்தங்களை மேற்கொள்வது அவரது உறுப்புரிமை இரத்துச் செய்யப்படுவதற்கு ஏதுவான குற்றமாகும்.
அதேவேளை தவிசாளர் மாதாந்தம் 260,000 ரூபா வாடகை அடிப்படையில் ஒரு வாகனத்தைப் பயன்படுத்துவதாகவும், இது தேவையற்ற வீண்விரயம் எனவும் கூறப்பட்டுள்ளது.
சபை நிதியிலிருந்து மாதாந்தம் 500 லீற்றர் டீசலைத் தவிசாளர் பெற்றுக்கொள்வதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சம்பளம் மற்றும் வரப்பிரசாதங்கள் ஊடாகத் தவிசாளர் மாதாந்தம் 5 இலட்சத்திற்கும் அதிகமான பொதுப்பணத்தைப் பயன்படுத்துவதாக எதிர்க்கட்சியினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது குறித்து மேல் மாகாண ஆளுநரிடம் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள சபை அமர்வில் இது குறித்துக் கேள்வி எழுப்பப்படவுள்ளதுடன், எதிர்காலத்தில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவும் அவர்கள் தீர்மானித்துள்ளனர்.
“களைகளைப் பிடுங்கிவிட்டு மலர்ச்செடிகளை நடுவதாகக் கூறி அதிகாரத்தைப் பிடித்தவர்கள், இன்று தாமே களைகளாக மாறிவிட்டனர்” என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விமர்சித்துள்ளனர்.
Tag Words: #GampahaNews #NPPSriLanka #CorruptionAllegations #LocalGovernment #SriLankaPolitics #PublicFunds #LKA #BreakingNews2026

