213
வாஷிங்டன் போஸ்ட் (Washington Post) இதழ் வெளியிட்டுள்ள அமெரிக்க தேசிய புலனாய்வு கவுன்சிலின் (National Intelligence Council) கசிந்த அறிக்கை ஒன்றின்படி, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுக்கும் பாரிய வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் அந்த நாட்டு அரசாங்கத்தை வீழ்த்தவோ அல்லது எதிர்க்கட்சிகளை அதிகாரத்திற்குக் கொண்டு வரவோ போதுமானதாக இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் இராணுவ மற்றும் மதகுருமார்களைக் கொண்ட ஆட்சி முறை மிகவும் ஆழமாக வேரூன்றியுள்ளது. முக்கிய தலைவர்கள் அல்லது அரசு நிறுவனங்கள் இலக்கு வைக்கப்பட்டாலும், இந்த அமைப்பு பிழைத்துக்கொள்ளும் வாய்ப்புகளே அதிகம் என அந்த இரகசிய அறிக்கை கூறுகிறது.
சிதறிக்கிடக்கும் ஈரானிய எதிர்க்கட்சிகளால் இத்தகைய தாக்குதல்களுக்குப் பிறகு அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது எனத் தெரிகிறது. இதன் மூலம் வெளிப்புற அழுத்தங்கள் மட்டுமே ஆட்சி மாற்றத்தைத் தூண்டும் என்ற எதிர்பார்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
ஈரானின் உச்ச தலைவர் உள்ளிட்ட உயர்மட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டாலும், ஆட்சியைத் தடையின்றித் தொடர்வதற்கான தெளிவான நடைமுறைகளையும் பாதுகாப்புக் கட்டமைப்புகளையும் ஈரான் கொண்டுள்ளது.
இந்த மதிப்பீடானது, கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி ‘ஒப்பரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) எனும் பெயரில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆரம்பித்த தற்போதைய பாரிய தாக்குதல் நடவடிக்கைக்கு ஒரு வாரத்திற்கு முன்னரே தயார் செய்யப்பட்டுள்ளது.
ஈரான் ஏற்கனவே ஈராக் உடனான போர், கடுமையான பொருளாதாரத் தடைகள் மற்றும் உள்நாட்டுப் போராட்டங்கள் போன்ற பல சவால்களை எதிர்கொண்டு சிதையாமல் தப்பிப்பிழைத்த வரலாற்றை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
தற்போதைய தாக்குதல்கள் ஈரானின் இராணுவத் திறனைக் குறைக்கலாம் அல்லது பெரும் இழப்புகளை ஏற்படுத்தலாம். ஆனால், வெறும் வான்வழித் தாக்குதல்கள் மூலம் மட்டும் ஈரானின் அரசியல் அமைப்பை மாற்றியமைக்க முடியாது என்பதையே இந்த உளவுத்துறை அறிக்கை உணர்த்துகிறது.
Spread the love

