ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) பகுதியில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் மூன்று வணிகக் கப்பல்கள் அடுத்தடுத்துத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளமை உலகளாவிய ரீதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரானுக்கு இடையிலான நேரடிப் போர் மோதல்கள் தீவிரமடைந்துள்ள சூழலில், சர்வதேச எண்ணெய் விநியோகத்திற்கு முதுகெலும்பாக விளங்கும் இந்தப் பாதையை முடக்கும் முயற்சியில் ஈரான் ஈடுபட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தாய்லாந்து நாட்டுக்குச் சொந்தமான ‘Mayuree Naree’ எனும் பாரிய சரக்குக் கப்பல் ஐக்கிய அரபு அமீரகக் கடற்பரப்புக்கு அப்பால் இனந்தெரியாத ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளானதில், அதன் ஊழியர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இது தவிர ஒரு கொள்கலன் கப்பல் (Container vessel) மற்றும் மற்றுமொரு சரக்குக் கப்பல் என மொத்தம் மூன்று கப்பல்கள் இந்த குறுகிய காலப்பகுதியில் இலக்கு வைக்கப்பட்டுள்ளன.
பிரித்தானிய கப்பல் போக்குவரத்து சபையின் (UK Chamber of Shipping) கொள்கை இயக்குனர் பீட்டர் அய்லாட் இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் இவ்வாறான தொடர் தாக்குதல்கள் நடத்தப்படுவது சர்வதேச வர்த்தகத்திற்கு விடுக்கப்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தல் என எச்சரித்துள்ளார்.
ஈரானிய படைகள் இந்தப் பகுதியில் கடல்சார் கண்ணிவெடிகளை (Mines) விதைப்பதாகத் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, அமெரிக்க மத்திய கட்டளைப் பணியகம் (CENTCOM) ஈரானுக்குச் சொந்தமான 16 கண்ணிவெடி விதைக்கும் கப்பல்களைத் தாக்கி அழித்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த மோதல் போக்கு காரணமாகச் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் சடுதியான மாற்றங்கள் ஏற்படக்கூடும் எனப் பொருளாதார நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.
#StraitOfHormuz #TrumpIranWar #MaritimeSecurity #OilSupplyChain

