145
ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்தில் அமைந்துள்ள மக்மூர் (Makhmour) பகுதியில் உள்ள இராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில், 6 பிரெஞ்சு வீரர்கள் காயமடைந்ததுடன், பிரெஞ்சு இராணுவத்தின் உயர் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
பெப்ரவரி மாதம் முதல் ஈரான் மற்றும் அமெரிக்க-இஸ்ரேல் தரப்புகளுக்கு இடையே நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், நேற்றைய திகதி (மார்ச் 12) இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எர்பில் நகருக்கு அருகில் உள்ள மலா காரா (Mala Qara) பகுதியில் அமைந்துள்ள பிரெஞ்சு மற்றும் குர்திஷ் பெஷ்மெர்கா படைகளின் கூட்டு முகாம் மீது இரண்டு ட்ரோன்கள் மூலம் இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது.
இந்தத் தாக்குதலில் ‘அர்னால்ட் பிரியன்’ (Arnaud Frion) என்ற பிரெஞ்சு இராணுவ அதிகாரி உயிரிழந்ததை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் உறுதிப்படுத்தியுள்ளார். காயமடைந்த 6 வீரர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலை “ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று” என ஜனாதிபதி மேக்ரான் வன்மையாகக் கண்டித்துள்ளார். “ஐ.எஸ் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடவே எமது வீரர்கள் ஈராக்கில் நிலைகொண்டுள்ளனர். ஈரானில் நடைபெறும் போர் இத்தகைய தாக்குதல்களை நியாயப்படுத்தாது” என அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதேவேளை, ஈராக்கில் உள்ள ‘அஷப் அஹ்ல் அல்-காஃப்’ (Ashab Ahl al-Kahf) என்ற ஈரான் ஆதரவு குழு, பிரெஞ்சு இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love

