190
மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் பதற்ற நிலையின் மத்தியில், பாலஸ்தீன ஆயுத இயக்கமான ஹமாஸ் (Hamas) தனது கூட்டாளியான ஈரான் வளைகுடா அண்டை நாடுகளை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்த வேண்டாம் எனக் கோரியுள்ளது. அதே நேரத்தில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல்களுக்கு எதிராக தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை ஈரானுக்கு இருப்பதாகவும் அந்த இயக்கம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “ஈரானில் உள்ள எங்கள் சகோதரர்கள் அண்டை நாடுகளை இலக்காகக் கொள்ளாமல் இருக்க வேண்டும்” என ஹமாஸ் வலியுறுத்தியது. மேலும், மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் இணைந்து நடந்து கொண்டிருக்கும் போரை நிறுத்துவதற்கும், பரஸ்பர சகோதரத்துவ உறவுகளைப் பாதுகாப்பதற்கும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, காசா மீது இஸ்ரேல் தொடங்கிய கடுமையான போரில் இதுவரை 72,000க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 171,000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேல் நடத்திய தொடர்ச்சியான குண்டுவீச்சுகள் காரணமாக காசா பகுதி பெருமளவில் அழிவுக்குள்ளாகியுள்ளது.
இந்த போர் சூழ்நிலையில், குறிப்பாக கத்தார் போன்ற வளைகுடா நாடுகள் நடுநிலைப் பேச்சுவார்த்தை, மனிதாபிமான உதவி மற்றும் தூதரக முயற்சிகள் மூலம் முக்கிய பங்காற்றியுள்ளன.
இதற்கிடையில், பெப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக போரை ஆரம்பித்ததிலிருந்து, வளைகுடா பகுதிகளில் உள்ள பல நாடுகள் மீது ஈரானிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல தசாப்தங்களாக ஈரான், ஹமாஸ் இயக்கத்திற்கு நிதி மற்றும் இராணுவ ஆதரவு வழங்கி வருகிறது. லெபனானின் ஹெஸ்பொல்லா மற்றும் யேமனின் ஹூத்திகள் உள்ளிட்ட குழுக்களுடன் இணைந்து செயல்பட்ட “எதிர்ப்பு அச்சு” (Axis of Resistance) எனப்படும் கூட்டணியின் ஒரு பகுதியாக ஹமாஸ் இருந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த மாதம் வளைகுடா நாடுகள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான Board of Peace முயற்சிக்கு 4 பில்லியன் டொலருக்கு மேற்பட்ட நிதி ஆதரவு வழங்குவதாக உறுதியளித்தன.
வாஷிங்டனில் நடைபெற்ற அந்த அமைப்பின் முதல் கூட்டத்தில் கத்தார் மற்றும் சவுதி அரேபியா தலா 1 பில்லியன் டொலர் வழங்குவதாக அறிவித்தன. குவைத் அடுத்த சில ஆண்டுகளில் 1 பில்லியன் டொலர் வழங்க உறுதியளித்ததுடன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் காசாவுக்கான ஆதரவாக 1.2 பில்லியன் டொலர் கூடுதலாக வழங்குவதாக அறிவித்தது.
2025 அக்டோபரில் அமெரிக்கா ஆதரவுடன் காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டாலும், அதன் பின்னரும் இஸ்ரேல் படைகள் துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுவீச்சுகள் மூலம் நூற்றுக்கணக்கான மீறல்கள் மேற்கொண்டதாகவும், அதில் பல பாலஸ்தீனர்கள் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய கிழக்கில் தொடரும் இந்த பதற்றம், பிராந்தியத்தின் நிலைத்தன்மைக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
Spread the love

