யாழ்ப்பாணத்தில் சுமார் 36 ஆண்டுகளாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த 2 ஏக்கர் தனியார் காணி இன்றைய தினம் திங்கட்கிழமை இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வசாவிளான் கிழக்கு (J/244) பகுதியில், ஒட்டகப்புலம் தேவாலயத்திற்கு அருகில் இராணுவ பயன்பாட்டிற்காக கையகப்படுத்தப்பட்டிருந்த காணிகளில் இருந்து இந்த 2 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இக்காணி விடுவிப்பிற்கான உத்தியோகபூர்வ ஆவணம், 511 படைப்பிரிவைச் சேர்ந்த பிரிகேடியர் கேணல் பி.எம்.சி. வன்னிநாயக்க அவர்களால் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மேலதிக செயலர்களான க. சிவகரன் மற்றும் பா. ஜெயகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
குறிப்பிடத்தக்க வகையில், அதே பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த 234.8 ஏக்கர் காணி கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதத்தில் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களால் விடுவிக்கப்பட்டிருந்தது. அப்போது மீதமுள்ள காணிகளையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டிருந்த போதிலும், சுமார் 22 மாதங்களுக்குப் பின்னர் தற்போது 2 ஏக்கர் காணி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் தேவாலயத்திற்கு அருகிலுள்ள சில காணிகள் இராணுவ கட்டுப்பாட்டில் தொடர்ந்தும் இருப்பதால், அவற்றையும் விரைந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#LandRelease #JaffnaArmy #VasavilanEast #Ottagapulam #DistrictSecretariat

