204
ஈரானுக்கு தோளில் வைத்து ஏவக்கூடிய ஏவுகணைகள் (MANPADS) உள்ளிட்ட புதிய வான் பாதுகாப்பு ஆயுத தளபாடங்களை அடுத்த சில வாரங்களுக்குள் வழங்குவதற்கு சீனா தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. CNN உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ள இந்தச் செய்தியின்படி, சீனா தனது ஆயுதத் தொகுப்பில் ஒரு பகுதியாக அகச்சிவப்பு கதிர்கள் மூலம் இயங்கும் ஏவுகணைகளை ஈரானுக்கு அனுப்பவுள்ளது. இவை குறைந்த உயரத்தில் பறக்கும் போர் விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும் எனக் கருதப்படுகிறது.
இந்த ஆயுத விநியோகமானது சீனாவிடமிருந்து நேரடியாகச் செல்லாமல், அதன் பூர்வீகத்தை மறைப்பதற்காகவும் உலக நாடுகளின் கண்காணிப்பைத் தவிர்ப்பதற்காகவும் மூன்றாம் நாடுகளின் ஊடாக அனுப்பப்படலாம் என உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது அமெரிக்கா, ஈரான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே ஒரு பலவீனமான போர்நிறுத்தச் சூழல் நிலவி வரும் நிலையில், சீனா மேற்கொள்ளும் இந்த நடவடிக்கை சமாதானப் பேச்சுவார்த்தைகளைப் பாதிக்கும் என வாஷிங்டன் கவலை வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த அறிக்கைகளை சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இவை அனைத்தும் “அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள்” எனத் தெரிவித்துள்ள பெய்ஜிங், அமெரிக்கா இத்தகைய வதந்திகளைப் பரப்புவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்க-இஸ்ரேல் கூட்டு நடவடிக்கைகள் தொடங்கியதில் இருந்து, ஈரானுக்கான சீனாவின் ஆதரவு அதிகரித்துள்ளதாகவும், இது பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க மற்றும் அதன் நட்பு நாடுகளின் விமானப் படைகளுக்கு நேரடி அச்சுறுத்தலாக அமையும் என்றும் அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
Spread the love

