யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையில் சிங்களக் கடும்போக்குவாத அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் சிலர் வந்து தங்கியுள்ளதாக காவற்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வலி. வடக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான ‘பவானி வீதி’ குறித்த விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் காணப்படுகிறது. இந்த வீதியை கடந்த 11ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்குமாறு பிரதேச சபை விகாரதிபதிக்கு அறிவுறுத்தியிருந்தது. இந்தக் காலக்கெடு முடிவடைந்த நிலையில், பிரதேச சபையினர் வீதியை மீட்கும் முயற்சியில் ஈடுபடக்கூடும் என்ற அச்சத்தில், அதனைத் தடுக்கும் நோக்குடன் இந்தக் கடும்போக்குவாதிகள் அங்கு தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
அதேவேளை, பிரதேச சபையின் இந்த முயற்சி இன நல்லிணக்கத்தைப் பாதிக்கும் எனவும், அமைதிச் சீர்குலைவை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்து பலாலி காவற்துறையினர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். குறித்த வீதியை மீட்கும் நடவடிக்கைக்குத் தடையுத்தரவு பிறப்பிக்குமாறு காவற்துறையினர் மன்றில் கோரியுள்ளனர்.இந்த வழக்கு கடந்த திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இது தொடர்பான கட்டளை எதிர்வரும் 21ஆம் திகதி பிறப்பிக்கப்படும் என மன்று திகதியிட்டுள்ளது.
#Jaffna #Thaiyitty #ViharaIssue #LandDispute #NorthernSriLanka #JaffnaNews #LegalUpdate #SriLanka

