Home இலங்கைகோட்டாபயவின் வாக்குமூலம் நீதிமன்றத்தில் பதிவு!

கோட்டாபயவின் வாக்குமூலம் நீதிமன்றத்தில் பதிவு!

சுகீஷ்வரவின் பெயருக்கு வந்த பணம் கோட்டாபயவின் கணக்கிற்குச் சென்றுள்ளது? விளக்கமறியல் நீடிப்பு!

by admin
முன்னாள் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரும் அரசியல் செயற்பாட்டாளருமான சுகீஷ்வர பண்டாரவின் விளக்கமறியல் காலம் எதிர்வரும் ஜூலை மாதம் 8ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது எனக் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதவான் பாசன் அமரசேன இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அத்துடன், பண்டாரவின் பிணை விண்ணப்பம் தொடர்பான தீர்ப்பும் அதே திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இரண்டு வேறுபட்ட அரச நிறுவனங்களில் இருந்து ஒரே நேரத்தில் சட்டவிரோதமாக இரட்டை மாதாந்த சம்பளங்களைப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் சுகீஷ்வர பண்டார ஜூன் மாதம் 18ஆம் திகதி மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்தும் ஒரு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக CCIB அதிகாரிகள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட விசாரணையாளர்களின் தகவலின்படி, தனிப்பட்ட செயலாளருக்குரிய கொடுப்பனவை தாமே பெற்றுக்கொண்டதாக ராஜபக்ஷ தமது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் பண்டார தனிப்பட்ட செயலாளராக நியமிக்கப்பட்டதாகவும், அதையடுத்து ஜனாதிபதி செயலாளர் நிதி பிரிவுக்கு அறிவுறுத்தி அந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டதாகவும் விசாரணையாளர்கள் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பண்டாரவின் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி நளிந்த இந்தத்திஸ்ஸ, ராஜபக்ஷவின் இந்த வாக்குமூலமே தமது கட்சிக்காரர் இரட்டைச் சம்பளம் பெறவில்லை என்பதைத் தெளிவுபடுத்துவதாக வாதிட்டுள்ளார். முறையான விசாரணையின்றியே பண்டார கைது செய்யப்பட்டதாகவும், சிறப்புத் திட்டப் பிரிவின் பணிப்பாளர் நாயகமாகப் பணியாற்றிய காலத்தில் ஆட்சேர்ப்பு, வாகன ஒதுக்கீடு போன்ற நிர்வாக முடிவுகள் ஜனாதிபதி செயலாளரால் எடுக்கப்பட்டதாகவும், பண்டாரவால் அல்ல எனவும் அவர் நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், சிறப்புத் திட்டப் பிரிவின் கீழ் 137 பேர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமையும், கோட்டாபய ராஜபக்ஷவின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இதற்காக ரூபாய் 24 கோடிக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டமையும் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
17 வாகனங்கள் இந்தப் பிரிவின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்ததாகவும், அவற்றில் ஒரு மேர்சிடிஸ் பென்ஸ் வாகனம் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஜூன் 18ஆம் திகதி கைது செய்யப்பட்டு அன்றே விளக்கமறியலில் வைக்கப்பட்ட பண்டார, ஜூலை 1ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, தற்போது ஜூலை 8ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More