54
பிரித்தானியாவின் பெட்ஃபோர்ட்ஷையர் (Bedfordshire) பகுதியில் உள்ள கிரேட் டென்ஹாம் (Great Denham) என்ற இடத்தில், தனது மனைவி மற்றும் இரு இளம் மகள்களை கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு வெளிநாட்டிற்குத் தப்பியோடிய நபர் சர்வதேச தேடுதல் வேட்டைக்கு பின் தென்னாப்பிரிக்காவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தோடானா மிக்ஞாயிசி சுமா (Ndodana Mkhanyisi Tshuma – 45) என்ற இந்தச் சந்தேக நபர், ஜோகன்னஸ்பர்க் நகரின் புறநகர்ப் பகுதியான கென்சிங்டனில் வைத்து தென்னாப்பிரிக்க காவற்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
கடந்த ஜூலை 6ஆம் திகதி திங்கட்கிழமை அன்று, இவர்களது வீட்டில் இருந்து நோதாபோ சாண்டில் சுமா (Nothabo Zandile Tshuma – 42), நடாலி (Natalie – 15) மற்றும் நாலா (Nala – 5) ஆகிய மூன்று பெண்மணிகளின் உடல்களும் காவற்துறையினரால் கண்டெடுக்கப்பட்டன. இக்கொலைகள் வெளிச்சத்திற்கு வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே, சந்தேக நபர் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தின் ஊடாகத் தப்பியோடியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, இன்டர்போல் (Interpol) மற்றும் சர்வதேச காவற்துறை அமைப்புகளின் தீவிர கூட்டு நடவடிக்கையின் மூலம் இந் நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவின் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் (CPS) இவர் மீது மூன்று கொலைக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளதுடன், இவரை மீண்டும் பிரிட்டனுக்குக் கொண்டு வருவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் துரிதமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Spread the love

