56
யாழ்ப்பாணத்தில் போலி ஆவணங்களைத் தயாரித்து, உரிமையாளர்கள் இல்லாத வெற்றுக்காணிகளை அடாத்தாகக் கையகப்படுத்தும் திட்டமிட்ட மோசடி கும்பல் ஒன்று தீவிரமாகச் செயற்பட்டு வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாகக் கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
திருநெல்வேலியில் நடந்த அதிரடிச் சம்பவம்:
அண்மையில் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில், பலாலி வீதிக்கு அருகேயுள்ள வெற்றுக்காணி ஒன்றினை அபகரிக்கும் நோக்குடன் எல்லைத் தூண்களை நடும் பணியில் அக்கும்பல் ஈடுபட்டுள்ளது.
இதனை அறிந்த காணியின் உண்மையான உரிமையாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தனது காணியில் தூண்களை நடுவது குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அக்கும்பல், “இந்தக் காணி எங்களுடையது, உன்னுடைய காணி என்றால் அதற்கான உறுதி ஆவணங்களைக் கொண்டு வந்து நிரூபி” என மிரட்டும் தொனியில் பேசியுள்ளது.
உரிமையாளர் எதிர் கேள்வி கேட்டு, அவர்களின் ஆவணங்களைக் காட்டுமாறு கோரியபோது, அதைக் காட்ட மறுத்து மிரட்டியுள்ளனர். உடனடியாக நில உரிமையாளர் காவல் துறையில் முறையிடப் போவதாகக் கூறி, கோப்பாய் காவல் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு பதிவு செய்துள்ளார். இதனையறிந்த மோசடி கும்பல் அவ்விடத்திலிருந்து தப்பியோடியுள்ளது.
தொடரும் மோசடி முயற்சிகள்:
இதே கும்பல் சில திகதிகளுக்கு முன்னரும் திருநெல்வேலிப் பகுதியிலுள்ள வேறொரு வெற்றுக்காணியை ஆக்கிரமிக்க முயன்றுள்ளது. அப்போதும் காணி உரிமையாளர் காவல் துறைக்குத் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்த முயன்றபோது அக்கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
காவல் துறையின் எச்சரிக்கை:
இச்சம்பவங்கள் குறித்துக் கோப்பாய் காவல் துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் பொதுமக்கள் குறிப்பாக:
நீண்டகாலமாகப் பராமரிப்பின்றி இருக்கும் வெற்றுக்காணிகளின் உரிமையாளர்கள்,
வெளிநாடுகளில் வசிக்கும் யாழ் மாவட்ட மக்கள், தங்களது காணிகளின் ஆவணங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்குமாறும், எல்லைகளை அவ்வப்போது நேரில் சென்று கண்காணிக்குமாறும் காவல் துறையினர் விழிப்புணர்வு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Spread the love

