யாழ்ப்பாணம், பலாலி (Palaly) சந்தியில் அமைந்துள்ள பொதுநோக்கு மண்டபத்தில், இளைப்பாற மற்றும் பொழுதுபோக்க வரும் சிவில் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் நில மீட்புப் போராட்டத்தில் ஈடுபடும் மக்களின் பாவனைக்காக வலி. வடக்கு பிரதேச சபையினால் உத்தியோகபூர்வமாக வைக்கப்பட்டிருந்த குடிநீர் தாங்கி (Water Tank) மற்றும் தற்காலிக மலசலகூடம் (Toilet Unit) என்பவற்றைப் பலாலி காவற்துறையினர் அங்கிருந்து பலவந்தமாக எடுத்துச் சென்றுள்ளனர்.
அத்துடன், குறித்த பொது இடத்தில் குடிநீர் தாங்கி மற்றும் தற்காலிக மலசலகூடம் என்பவற்றை வைத்தமை தொடர்பில் வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளரிடம் (Chairman) உத்தியோகபூர்வ வாக்குமூலம் பெற்ற பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் (Mallakam Magistrate Court) ஒப்படைத்துச் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகப் பலாலி காவற்துறையினர் அறிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணச் சுற்றுலாத்துறையை சர்வதேச மட்டத்தில் மேம்படுத்தும் நோக்கில், வடமாகாணத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் பொதுச் சுகாதார வசதிகளை ஏற்படுத்தி, உள்ளூராட்சி மன்றங்கள் அவற்றை தினசரி கண்காணித்து முறையாகப் பராமரிக்க வேண்டும் என வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜே. விவேகானந்தன் அண்மையில் பகிரங்கக் கோரிக்கை விடுத்திருந்தார்.
சுற்றுலாப் பயணிகளின் அடிப்படை சுகாதாரத் தேவைகளுக்காக உள்ளூராட்சி மன்றம் மேற்கொண்ட இத்தகைய உன்னதச் சேவையை, காவற்துறையினர் நீதிமன்ற சட்ட நடவடிக்கையைக் காட்டி அகற்றியுள்ளமை குடாநாட்டுச் சிவில் அமைப்புகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பலாலியில் காவற்துறையினர் மேற்கொண்டுள்ள இந் நடவடிக்கையின் பின்னணியில் அரசியல் மற்றும் சிவில் போராட்ட முடக்கல் நோக்கம் இருப்பதாக அப்பகுதி மக்கள் சாடுகின்றனர்:
பலாலி சந்தியில் தங்களது பூர்வீக நிலங்களை ராணுவத்திடமிருந்து விடுவிக்கக் கோரி, பலாலி பகுதிச் சிவில் மக்கள் கடந்த ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளாகத் தொடர் போராட்டங்களை நடத்தி வருவதுடன், எதிர்வரும் ஞாயிறுகளிலும் போராட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் வீதியில் தற்காலிகக் கொட்டகை அமைப்பதற்குப் பலாலி காவற்துறையினர் ஏற்கனவே உறைப்பாகத் தடை விதித்திருந்தனர். இதனால், போராட்டத்தில் பங்கேற்கும் வயோதிபப் பெண்கள், முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் அருகில் உள்ள பொதுநோக்கு மண்டபத்திலேயே இளைப்பாறி, உணவருந்தி அங்கிருந்த குடிநீர் தாங்கி மற்றும் தற்காலிக மலசலகூடத்தையே பயன்படுத்தி வந்தனர்.
போராட்டம் நடத்தும் மக்களின் அடிப்படை இயற்கை உபாதைகள் மற்றும் குடிநீர்த் தேவைகளை முடக்குவதன் மூலம் போராட்டத்தைச் சீர்குலைக்கவே காவற்துறையினர் இப் பொருட்களை அகற்றியுள்ளனர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. வயோதிபர்களின் சுகாதாரத் தேவைகளைக் கூடப் பொருட்படுத்தாது காவற்துறையினர் மேற்கொண்ட இச் செயல், அப்பகுதி மக்களிடம் கடுமையான கோபத்தையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
#PalalyPoliceAction2026 #ValiNorthPradeshiyaSabha #MallakamMagistrateCourt #PalalyLandProtest2026 #NorthernProvince #TourismCrisis

