“யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பிராந்தியத்தில் தமிழ் பேசும் மக்களின் பூர்வீகத்திற்குச் சொந்தமான 6,317 ஏக்கர் காணியைப் பாதுகாப்பு அமைச்சினால் சுவீகரிப்பதாகக் கடந்த 2013ஆம் ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலைத் தற்போதைய அரசாங்கம் உடனடியாக மீளப்பெறுவதற்கான அழுத்தங்களை வழங்க வேண்டும்” என யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியப் (European Union) பிரதிநிதிகளிடம் வடமாகாணச் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் உத்தியோகபூர்வமாக எழுத்து மூலமாகக் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் கார்மென் மொரேனோ மற்றும் ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து ஆகிய உறுப்பு நாடுகளின் தூதுவர்களுக்கும், வடமாகாணச் சிவில் அமைப்புப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான உயர் மட்ட உத்தியோகபூர்வக் கலந்துரையாடல் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (2026 ஜூலை 21) யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்ற போதே இக் கோரிக்கை மனு கையளிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்களிடம் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வக் கோரிக்கை மனுவில் , யுத்தம் நிறைவடைந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், பொதுமக்களின் பூர்வீகக் காணிகள் பாதுகாப்புப் படையினரால் விடுவிக்கப்படாமல் தொடர்ச்சியாகக் கையகப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 2013-இல் வெளியிடப்பட்ட 6,317 ஏக்கர் காணிச் சுவீகரிப்பு வர்த்தமானி (Land Acquisition Gazette) இதுவரை உத்தியோகபூர்வமாக அரசாங்கத்தால் மீளப் பெறப்படவில்லை.
ஏழைத் தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகளைத் தேசியப் பாதுகாப்புத் தரப்பினரிடம் இருந்து உடனடியாக மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கவும், சுவீகரிப்பு வர்த்தமானியை முற்றாக ரத்துச் செய்யவும் இலங்கை அரசாங்கத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் சர்வதேச மட்டத்தில் ழுத்தங்களை அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இச் சந்திப்பின் போது வடகிழக்கு மாகாணங்களின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழல்கள் குறித்துப் பல முக்கிய விடயங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டன. இலங்கையின் தற்போதைய அரசியல் பின்னணி, வடகிழக்கு மாகாணங்களின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி, மனித உரிமைகள் பேணல், நல்லாட்சி மற்றும் சமூக நீதி என்பன குறித்து ஆழமாக ஆராயப்பட்டது.
அத்துடன் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் நிலையான அபிவிருத்திப் பொறிமுறைகள் குறித்தும் விளக்கப்பட்டது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறுபான்மைத் தமிழ் மக்களின் நீண்டகாலக் காணி உரிமைப் பிரச்சினைகள், காணி மீட்பில் நிகழும் திட்டமிட்ட கால தாமதங்கள், காணி அபகரிப்பு மற்றும் சுவீகரிப்பு ஆகியவற்றால் மக்கள் தினமும் எதிர்நோக்கும் சமூக மற்றும் வாழ்வாதார நெருக்கடிகள் தூதுவர் குழுவிடம் தெளிவுபடுத்தப்பட்டன.
#ValiNorthLandGazette2026 #EUDiplomatsJaffnaCivilSociety #6317AcresLandGrab #NorthernProvinceLandRights #SriLankaHumanRightsBriefing

