தமிழக கடற்தொழிலாளர்களின் எல்லை தாண்டிய இழுவைமடிப் படகுகளின் அத்துமீறல்களால் தீவக கடற்தொழிலாளர்களின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள் அறுக்கப்பட்டு நாசமாக்கப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க உப தலைவர் செபமாலை அந்தோணி சிவராசா தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக கடற்தொழிலாளர்களின் இழுவைமடிப் படகுகள் எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து அனலைதீவு, எழுவைதீவு, நெடுந்தீவு, நயினாதீவு, மண்டைதீவு மற்றும் புங்குடுதீவு பகுதி கடற்தொழிலாளர்களின் வலைகளை அறுத்து சேதப்படுத்தியுள்ளன.
இதனால் பல இலட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதுடன், மீண்டும் வலைகளைக் கொள்வனவு செய்து தொழிலுக்குச் செல்வதில் எமது தொழிலாளர்கள் பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளனர். பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நஷ்டஈடு வழங்கக்கூட எவரும் இல்லாத நிலையில், அவர்கள் அநாதரவாக நிற்கின்றனர்.”
மேலும், கடற்தொழில் அமைச்சர் ஊடாக இலங்கை அரசாங்கத்திடம் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தக் கோரி வருவதாகவும், இலங்கை கடற்படையினர் முழுமையான கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்த அவர், காரைக்கால், புதுக்கோட்டை மற்றும் இராமேஸ்வரம் பகுதிகளைச் சேர்ந்த கடற்தொழிலாளர்கள் எல்லை தாண்டுவதைத் தடுத்து நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார். தொப்புள்கொடி உறவுகளான இரு தரப்பினருக்கும் இடையில் தேவையற்ற முரண்பாடுகள் ஏற்படுவதைத் தவிர்க்க, இரு நாட்டு அரசாங்கங்களும் பேச்சுவார்த்தை மூலம் நிரந்தரத் தீர்வைக் காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
#Jaffna #NorthernProvince #SriLanka #FishermenCrisis #SriLankanFishermen #TamilNaduFishermen #FishermenIssue #IndianOcean #MaritimeBoundary #Livelihood #SeaBoundary #FishingNetsDamaged #Srilankatoday

