Home இலங்கை கொழும்பில் துண்டிக்கப்பட்ட நிலையில் தலையும் – மலையகத்தில் சடலமும் மீட்பு…

கொழும்பில் துண்டிக்கப்பட்ட நிலையில் தலையும் – மலையகத்தில் சடலமும் மீட்பு…

by admin

கொழும்பு, வாழைத்தோட்டம், பண்டாரநாயக்க மாவத்த பகுதியில் துண்டிக்கப்பட்ட நிலையில் ஒருவரின் தலை மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர்  தெரிவித்துள்ளனர். இன்று (07.03.18) காலை பொதியொன்றில் போடப்பட்டிருந்த நிலையிலேயே இந்த தலை மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

திம்புள்ள பத்தனை காவற்துறைப்  பிரிவுக்குட்பட்ட கிரேக்லி தோட்டத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரை நேற்று (06) இரவு வீட்டிற்கு செல்லும் வழியில் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பத்தனை கிரேக்லி தோட்ட தொழிற்சாலையில் உதவி உத்தியோகத்தராக பணி புரியும் இவர் தனது வீட்டுக்கும் பத்தனை காவற்துறை நிலையத்திற்கும் இடையில் வீட்டிலிருந்து சுமார் 50 மீற்றர் தொலைவில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் கிரேக்லி தோட்டத்தைச் சேர்ந்த 38 வயதுடைய  எஸ்.திருச்செல்வம்   என அடையாளம் காணப்பட்டுள்ளார்.  இவர் நேற்று (06) வேலைக்கு சென்று விட்டு இரவு 9 மணி வரை வீட்டுக்கு வராததால் உறவினர்கள் இவரை தேடி சென்ற போதே இவர் கொலை செய்யப்பட்டிருப்பதனை கண்டு காவற்துறையினருக்கு  அறிவித்துள்ளனர்.  சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

குறித்த சடலம் கொட்டகலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஹட்டன் நீதவானின் மேற்பார்வையின் பின் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும், நுவரெலியா கைரேகை அடையாளப்பிரிவின் பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக திம்புள்ள பத்தனை காவற்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் காவற்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More