Home இலங்கை உள்நாட்டு – சர்வதேச கண்டனங்களை அடுத்து நிசாந்த சில்வாவின் இடமாற்றம் இரத்து….

உள்நாட்டு – சர்வதேச கண்டனங்களை அடுத்து நிசாந்த சில்வாவின் இடமாற்றம் இரத்து….

by admin

(11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்த்தின் பிரதான சந்தேக நபரான முன்னாள் கடற்படை அதிகாரி நேவி சம்பத்தை அழைத்துச் செல்லும் நிசாந்த சில்வா)

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் காவற்துறைப் பரிசோதகர் நிசாந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் இரத்து செய்யப்பட்டுள்ளது. குறித்த இந்த இடமாற்றமானது நேற்றிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நீர்கொழும்பு காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிக்கே இடமாற்றம் வழங்கப்பட்டதாகவும் காவற்துறைத் திணைக்களம் அறிவித்திருந்தது. எனினும், தமது இடமாற்றத்திற்கெதிராக  காவற்துறை ஆணைக்குழுவில் நிசாந்த சில்வா மேன்முறையீடும் செய்திருந்தார்.

இந் நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவிற்கமைய காவற்துறைத் திணைக்களம் இரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நிசாந்த சில்வா கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தி கொலை செய்யப்பட்ட விவகாரம், லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்ட விவகாரம், வஷீம் தாஜூடீன் படுகொலை, ஊடகவியலாளர் கீத் நொயார் விவகாரம் உட்பட பல சம்பவங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


நிசாந்த சில்வாவின் இடம்மாற்றம் குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை கவலைதெரிவிப்பு…

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்கள் குறித்த விசாரணைகளில் தலையீடுகள்இடம்பெறுவது குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை கவலை வெளியிட்டுள்ளது.

கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தி கொலை செய்யப்பட்டமை,லசந்த விக்கிரமதுங்க வாசிம் தாஜூடீன் படுகொலை, ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை உட்பட பல சம்பவங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு மிகத்திறமையாக செயற்பட்டுக்கொண்டிருந்த நிசாந்த சில்வா கடந்த மாதம் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து உடனடியாக இடமாற்றப்பட்டுள்ளமை குறித்தே மன்னிப்புச்சபை கவலை வெளியிட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான ஆராய்ச்சியாளர் தயாகி ருவன்பத்திர இதனை தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் காணாமல்போதல்கள் உட்பட முக்கிய மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணைகளில் தலையீடுகள் இடம்பெறுவதாக தோற்றம் ஏற்பட்டுள்ளமை குறித்து தாம் கவலையடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போதும் இடம்பெறும் விசாரணைகளில் எந்த காரணத்திற்காகவும் முட்டுக்கட்டை நிலை ஏற்படாமலிருப்பதை அதிகாரிகள் உறுதிசெய்யவேண்டும் எனவும் குறிப்பிட்ட, அவர் இந்த சம்பவங்களிற்கான நீதி மிகநீண்டகாலமாகவே வழங்கப்படாமலுள்ளது என்பதனையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

1 comment

Siva November 20, 2018 - 9:10 pm

திரு. மைத்திரிபால சிறிசேனவுக்குத் தன்னிஷ்டத்துக்கு ஆணைகளைப் பிறப்பிப்பதும், பின்பு இன்னோரன்ன பிற அழுத்தங்களுக்கு அடிபணிந்து அவற்றை மீள பெறுவதும், ஒன்றும் புதிதல்லவே? கிறுக்குத்தனமான இது போன்ற நடவடிக்கைகள் காரணமாக அவர் குறித்த அதிருப்தியை உள்நாட்டில் மட்டுமன்றிச் சர்வதேசம் பூராவும் காண முடிகின்றது.

முன்னைய ஆட்சியாளர்கள் காலத்தில் காணப்பட்ட ஊழல் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இவரை ஆட்சியில் இருத்தியவர்களுக்கு, இன்றைய ஊழல் நடவடிக்கைகளை இவரே ஊக்குவிப்பதானது மிகக் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. திரு. மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சியை இஸ்திரப்படுத்தும் நோக்கில் இவரே பா. உறுப்பினர்களைத் தேடிக் களமிறங்கியிருப்பதன் மூலம் தன்னைத் தானே தரம்தாழ்த்திக்கொண்டார் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? சட்டவிரோதமாக ஏற்படுத்திய ஆட்சியை நியாயப்படுத்த இவர்கள் போடும் நாடகங்கள் கொஞ்சநஞ்சமல்ல.

ஆக, திரு. மைத்திரிபால சிறிசேன தனது அரசியல் எதிர்காலத்தைத் தானே குழிதோண்டிப் புதைத்துக்கொண்டார், என்பதே உண்மை.

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More