Home இலங்கை புத்தாண்டை வரவேற்கும் தலைவர்கள்….

புத்தாண்டை வரவேற்கும் தலைவர்கள்….

by admin

வெற்றி தோல்விகளையும்,  குறைகளையும்,  மீண்டும் மீட்டிப் பார்ப்பதற்கான சிறந்த தருணம்….
கடந்த காலத்தில் கைநழுவிய வாய்ப்புகளை அறிந்து அதன்மூலம் புத்தம்புது வழிகளை நோக்கி எம்மை இட்டுச்செல்லக்கூடிய, வரலாற்றில் மிக முக்கியமான காலப்பகுதியே இன்று மலர்கின்றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

கடந்து வந்த வருடத்தில் எமது வாழ்க்கையில் முகங்கொடுக்க நேர்ந்த வெற்றி தோல்விகளை பற்றியும் நிறை குறைகளை பற்றியும் மீண்டும் மீட்டிப் பார்ப்பதற்கான சிறந்த தருணமாகும் எனத் தெரிவித்துள்ள அவர் கடந்த காலத்தை மீண்டும் மீட்டிப்பார்ப்பதன் மூலமே மனிதன் வளமான எதிர்காலத்தை அடைகின்றான் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அனைத்து சவால்களையும் வெற்றிகொண்டு, மலரும் 2019ஆம் புத்தாண்டில் ஒழுக்கம், நல்லிணக்கம் மற்றும் சுபீட்சம் ஆகியவற்றை அடையக்கூடிய பரந்த பாதையில் முன்பைவிட கூடுதல் கரிசனையுடனும் கவனத்துடனும் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

சவால்களை முறியடித்து, இறைமையை உறுதிப்படுத்திய ஆண்டை வரவேற்போம்…

சவால்களை முறியடித்து, இறைமையை உறுதிப்படுத்தியவாறு இந்த புதுவருடத்தை வரவேற்க கிடைத்தமை அனைவரும் பெற்றுக்கொண்ட வெற்றியாகுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இன, மத, கட்சி பேதமின்றி ஜனநாயகத்தை வெற்றிபெறச் செய்வதற்காக அணிதிரண்ட மக்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 நாகரீகமான, நீதி நியாயம் மிக்க சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கு நாம் மேற்கொண்ட அந்த நடவடிக்கைகள் தமக்கு பலத்தினையும் துணிச்சலையும் வழங்கியதாலேயே தாம் அரசியலமைப்புக்கு முரணான சூழ்ச்சியைத் தோல்விடையச் செய்தோம் எனவும் பிரதமர் தமது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் பிறக்கின்ற புதுவருடம் சகல மக்களுக்கும் சவால் மிக்கதென்றும், ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்தி, எதிர்கால சந்ததியினருக்கு மிகவும் சிறந்த சமூகமொன்றைக் கட்டியெழுப்பும் பொறுப்புண்டு எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

பிரிவினைவாதிகளுக்கெதிராக செயற்பட இந்த புதிய வருடத்தில் திடசங்கற்பம் கொள்வோம்…

சமூகங்களை இன, மத அடிப்படையில் பிரிக்கும் குறுகிய அரசியல் எண்ணம் கொண்ட பிரிவினைவாதிகளுக்கெதிராக செயற்பட இந்த புதிய வருடத்தில் திடசங்கற்பம் கொள்வோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனது புதுவருட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

சமூகங்களிடையே பிரிவினையை கொண்டுவரும் பாதக காரணிகளுக்குள் சிக்கிவிடக் கூடாதெனத் தெரிவித்துள்ள அவர் புதிய வருடத்திற்குள் காலடி எடுத்துவைக்கும் இத்தருணத்தில் இந்நாட்டு மக்களுக்கு நம்பிக்கையையும் எதிர்பார்ப்பினையும் கொண்டுவர பிரார்த்தனை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம் நிகழ்ந்த சாதக, பாதக நிகழ்வுகள் யாவும் படிப்பினைகளை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ள சம்பந்தன், இந்த படிப்பினைகளைக் கொண்டு வாழ்வினை வளப்படுத்திக்கொள்வதற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட சமூகங்கள் தமது நீண்டகால பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் இந்த புதிய வருடத்தில் அடையவேண்டுமென பிரார்த்திப்பதாகவும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

மலர்ந்திருக்கும் புத்தாண்டில் ஒற்றுமையின் மூலம் இலங்கை வலிமைபெறும்..

மலர்ந்திருக்கும் புத்தாண்டில் ஒற்றுமையின் மூலம் இலங்கை வலிமைபெறும் என்பதில் முழு நம்பிக்கை கொண்டுள்ளதாக, எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ தனது புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஒற்றுமையே தமது வெற்றியின் அடையாளம் எனக் குறிப்பிட்டுள்ள அவர் நம்பிக்கையுடன் 2019ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் இத்தருணத்தில் அனைவருக்கும் சமாதானமும், சுபீட்சமும் உண்டாக வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.

இலங்கை சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை இந்த புதிய ஆண்டிலாவது நிறைவேற்றுமா?

இலங்கை சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை இந்த புதிய ஆண்டிலாவது நிறைவேற்றுமா என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

இன்று வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பல எதிர்பார்ப்புக்களுடன் 2019ஆம் ஆண்டு பிறக்கின்றது எனத் தெரிவித்துள்ளன அவர் மக்கள் தமது புதிய ஜனாதிபதி, மாகாண, பாராளுமன்ற பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் ஆண்டாக இவ்வாண்டு அமையப்போகின்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இலங்கை சர்வதேசத்திற்கு தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இதுவரையில் என்ன செய்தது என்பது குறித்து ஜெனிவாவில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய ஆண்டாகும்.

2018 ஆம் ஆண்டு டிசெம்பர் 31க்கு முன்னர் எமது மக்களின் காணிகளைத் திருப்பிக் கொடுக்க ஜனாதிபதியால் ஆணையிடப்பட்டிருந்தும், படையினரால் தவணை கோரப்பட்டுள்ளது. அதேபோல் ஜெனிவாவிலும் தவணை கேட்கப்படலாம்.

எது எவ்வாறிருப்பினும் இந்நாட்டு மக்கள் தம்முள் ஐக்கியத்தையும் பரஸ்பர புரிந்துணர்வையும் ஏற்படுத்தி நிறைவுடன் பயணிக்கும் ஒரு ஆண்டாக 2019 அமைய வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More