Home இலங்கை காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடும் பெண்கள் துன்புறுத்தலுக்குள்ளாகின்றனர்

காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடும் பெண்கள் துன்புறுத்தலுக்குள்ளாகின்றனர்

by admin


இலங்கையில் காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடும் பெண்கள், பாதுகாப்புத் தரப்பு அதிகாரிகளாலும், அரசாங்க அதிகாரிகளாலும், துன்புறுத்தல்களுக்கு உள்ளாகுவதாகவும் இலங்கைக் காவல்துறையினர் தொடர்ச்சியாக சித்திரவதைகளில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பம்பியோவினால் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டு வைக்கப்பட்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் 2018ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் அறிக்கையிலேயே, இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் அரசமைப்பு மற்றும் சட்டங்களினூடாக, சித்திரவதைகள், ஏனைய கொடூரமான மனிதநேயமற்ற மோசமான நடத்தைகள் மற்றும் தண்டனைகள் தடை செய்யப்பட்டுள்ள போதிலும், அதிகாரிகள் அவற்றைத் தொடர்ந்தும் பயன்படுத்தி வருவதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் சிவில் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் பாதுகாப்புப் படைகள் இருந்தாலும், இராணுவம் மற்றும் காவல்துறை என்பன, பொதுமக்களைத் துன்புறுத்துகின்றன.

அத்துடன் உள்நாட்டுப் போரில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பாக, இலங்கைப் படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறும் பொறிமுறை, இதுவரையில் உருவாக்கப்படவில்லை என்ற போதிலும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட சில அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை செய்வதற்கும் சட்டத்தின் முன் நிறுத்தவும், தண்டனை விதிக்கவும், கடந்த ஆண்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டத்துக்குப் புறம்பான கொலைகள், சித்திரவதை, பாலியல் துன்புறுத்தல், அரசாங்கப் படைகளால் தன்னிச்சையாக தடுத்து வைத்தல், இணைய முடக்கம், ஊழல் உள்ளிட்ட மனித உரிமை பிரச்சினைகள் தொடர்கின்றன எனவும், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More