
வர்த்தகர் ஒருவரின் மனைவியை கொலை செய்துவிட்டு நகைகளை கொள்ளையிட்டு சென்ற இருவரை காவல்துறையினா் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினா் பிரிவுக்குட்பட்ட அரசடி பார்வீதியில் உள்ள வீடு ஒன்றில் இன்று(20) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டுக்கு வழமையாக வேலைக்கு செல்லும் தகப்பனும் மகளுமே இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இரு சந்தேக நபர்களும் எங்களுக்கு பசிக்கிறது சாப்பாடு தாருங்கள் என்று கூறி கொலை செய்யப்பட்ட பெண்ணிடம் சாப்பாடு வாங்கி உணவை உண்டுகொண்டிருக்கும்போது திடீரென பெண் மீது கத்தியால் சரமாரியாக வெட்டுள்ளதுடன் கழுத்தை வெட்டி தாலிக்கொடியை அறுத்தெடுத்துள்ளதுடன் காதுகளில் உள்ளவற்றை அகற்ற முடியாமல் அதனை வெட்டி எடுத்துச்சென்றுள்ளமையும் காவல்துறையினரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கொலை செய்த இருவரும் அங்கிருந்த தங்க நகைகளை களவாடிச் சென்ற நிலையில் வீதியில் நின்றவர்கள் அவர்களின் உடைகளில் இரத்தக்கறை உள்ளதை கண்டு சந்தேகம் கொண்டு துரத்திச்சென்று இருவரையும் பிடித்துகாவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேற்படி கொலை சம்பவத்தின்போது 50 வயதுடைய தயாவதி செல்வராஜா என்னும் பெண்ணே உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதிக்கு வந்த மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினர் மற்றும் புலனாய்வுத்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்ட தடவியல் பிரிவு காவல்துறையினரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
—
Add Comment