Home இலங்கை முல்லை மண் தந்த இலக்கிய ஆளுமை கலாநிதி முல்லைமணி காலமானார்

முல்லை மண் தந்த இலக்கிய ஆளுமை கலாநிதி முல்லைமணி காலமானார்

by admin


பண்டார வன்னியன் நாடகத்தை எழுதியவரும் வன்னி மண்ணின் சரித்திரத்தை தன் எழுத்துக்களில் வடித்தவருமான கலாநிதி முல்லைமணி நேற்று காலமானார்.  முல்லைமணி என்ற புனைபெயரில் பல்வேறு படைப்புக்களை எழுதிய கலாநிதி வே. சுப்பிரமணியம் எழுத்துலகில் நாடகம், சிறுகதை, நாவல், கவிதை, வரலாற்று ஆய்வுகள், இலக்கிய திறனாய்வு என பல்வேறு துறைகளில் தனது புலமையை ஆழமாக பதித்தவர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளியவளையில் பிறந்தவர் முல்லைமணி. இலங்கை பல்கலைக்கழக தமிழில் சிறப்பு கலைமாணி பட்டம் பெற்றவர். இவரது கலை இலக்கிய ஆய்வுப்பணிகளை அங்கீகரித்து 2005இல் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதி  பட்டம் வழங்கி கௌரவித்தது.
பாடசாலை அதிபர், ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர், கொத்தணி அதிபர், பிரதம கல்வி அதிகாரி, மாவட்ட கல்விப்பணிப்பாளர் முதலான பதவிகளை வகித்து திறம்பட சேவை புரிந்தவர்.

இவரது ‘பண்டாரவன்னியன்’ வரலாற்று நாடகம் இதுவரை ஐந்து பதிப்புகள் கொண்டு வெளியாகியதுடன் இன்றுவரை நாடகமாகவும் கூத்தாகவும் பேணப்பட்டு வருகின்றது.

தணியாத தாகம் (பண்டாரவன்னியன் – வரலாற்று நாடகம்), மல்லிகைவனம் – 1985, வன்னியின் கதை, கொக்கிளாய் மாமி, அரசிகள் அழுவதில்லை – 1977, கொண்டுவந்த சீதனம் – 2005, வன்னியர் திலகம் – 1996, கமுகஞ்சோலை – 2000, இலக்கியப்பார்வை- 1999?, வன்னியியற் சிந்தனை – 2001, தமிழ்மொழி பயிற்சி – 1975 முதலியன இவர் எழுதிய நூல்களாகும்.

2015 அரச இலக்கிய விருது விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கலாநிதி முல்லைமணிக்கு சாஹித்ய ரத்னா விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More