Home இலங்கை வவுனியா வளாகத்தை தனியான பல்கலைக்கழகமாக தரம் உயர்த்த வேண்டுமெனத் தெரிவித்து பேரணி நடைபெற்றுள்ளது.

வவுனியா வளாகத்தை தனியான பல்கலைக்கழகமாக தரம் உயர்த்த வேண்டுமெனத் தெரிவித்து பேரணி நடைபெற்றுள்ளது.

by admin

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை தனியான பல்கலைக்கழகமாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை  முன்வைத்து இன்றையதினம்  கவன ஈர்ப்புப் பேரணியொன்று  நடைபெற்றுள்ளது.

இதற்கான அழைப்பை வவுனியா வளாக ஆசிரியர் சங்கம் விடுத்திருந்தது. யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், பாடசாலைகளில் பயிலும் உயர் வகுப்பு மாணவர்கள் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண சுகாதாரத்துறை அமைச்சர், மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர், கட்சி பேதங்களைக் கடந்து இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர்.

சமூகத்தின் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் பொதுமக்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்து கொண்ட இந்தப் பேரணி வவுனியாவின்  குருமண்காட்டில் ஆரம்பமாகி, வவுனியா  புகையிரத  நிலைய வீதி, நகர வீதிகள் ஊடாக வவுனியா செயலகத்திற்குச் சென்று முடிவடைந்தது.


வவுனியா முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம், வர்த்தகர் சங்கம், உட்பட பல்வேறு பொது அமைப்புக்களும் இந்தப் பேரணிக்கு ஆதரவளித்திருந்ததுடன் பெரும் எண்ணிக்கையிலான முச்சக்கர வண்டிகளும் இந்தப் பேரணியில் பங்கு கொண்டன.

கடந்த 25 வருடங்களாக நேரடி நிதி ஒதுக்கீடு உதவியின்றி யாழ் பல்கலைக்கழகத்தின் ஒரு பிரிவாக இயங்கி வருகின்ற வவுனியா வளாகத்தை வன்னிப் பல்கலைக்கழகமாகத் தரம் உயர்த்த வேண்டியதன் அவசியம் குறித்து இந்த வளாக ஆசிரியர் சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளனர்.   கடந்த 1991 ஆம் ஆண்டு இணைந்த பல்கலைக்கழக கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்டு, 1996 ஆம் ஆண்டு இது யாழ் பல்கலைக்கழகத்தின் வளாகமாகத் தரம் உயர்த்தப்பட்டது.

இதேபோன்று ஆரம்பிக்கப்பட்ட, வேறு இடங்களைச் சேர்ந்த நான்கு இணைந்த பல்கலைக்கழகக் கல்லூரிகள், தனித்தனி பல்கலைக்கழகங்களாகத் தரம் உயர்த்தப்பட்டிருக்கின்றன. ஆயினும் இந்த கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு 25 வருடங்களாகிவிட்ட போதிலும், இது இன்னும் பல்கலைக்கழகமாகத் தரம் உயர்த்தப்படவில்லை என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

மோசமான யுத்த மோதல்களை எதிர்கொண்டதன் பின்னர், மீள்குடியேற்றப் பிரதேசமாகிய வன்னிப் பிரதேசத்தின் கல்வி நிலையை உயர்த்துவதற்குத் தனியானதொரு பல்கலைக்கழகம் அவசியம் என்பதையும் வவுனியா வளாக ஆசிரியர் சங்கம் இந்தப் பேரணியின் பின்னர் ஜனாதிபதிக்கு கையளித்துள்ள மகஜரில் தெரிவித்துள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More