Home இலங்கை கேப்பாபுலவு ஈழத்தின் முன்னுதாரணமான சனப் போராட்டம்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-

கேப்பாபுலவு ஈழத்தின் முன்னுதாரணமான சனப் போராட்டம்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-

by admin
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள், தங்கள் பூர்வீக நிலத்தை மீட்கும் தொடர் போராட்டத்தை நடாத்தி ஒரு மாதம் கடந்த நிலையில் அதாவது  30 நாட்கள் தொடர் போராட்டத்தின் பின்னர் வெற்றி பெற்றுள்ளனர். கேப்பாபுலவு மக்கள் மேற்கொண்ட போராட்ட வழிமுறை மிகவும் கூர்மையானது. ஆனால் மிகவும் நெருக்கடி கொண்டது. அப்படி நெருக்கடி கொண்ட அந்தப் போராட்டத்தில்தான் உக்கிரமும் மிகுந்திருந்தது. இரவு பகலாக 30 நாட்கள் அந்த மக்கள் பனியிலும் வெயிலிலும் மேற்கொண்ட போராட்டம் சாதாரணமானதல்ல. இது உன்னதமான மக்கள் போராட்டம்.
கேப்பாபுலவு மக்கள் காலம் காலமாக வாழ்ந்த நிலம். அவர்கள் தம் உதிரத்தை, வியர்வையை கொண்டு உருவாக்கியது அந்த நிலம். சொந்த நிலத்திற்காக உயிரையும் விடுவோம் என்று உறுதி பூண்டவ்கள் கேப்பாபுலவு மக்கள். அங்கு வரும் மக்கள் பிரதிநிதிகளைப் பார்த்து அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அவ்வளவு எளிதில் பதில் சொல்ல முடியாது. ஓர்மத்தை  உறுதியை  கேப்பாபுலவு மக்களிடமிருந்து  ஈழ மக்கள் கற்றுக் கொள்ள வேண்டும். எத்தகைய போராட்ட வடிவத்தை கையில் எடுக்க வேண்டும்? ஈழமெங்கும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை எப்படி மீட்க வேண்டும் என்பதற்கு இந்த மக்களின் உன்னதமான போராட்டம் ஒரு முன்னுதாரணமாய் அமைந்துவிட்டது.
பிலக்குடியிருப்பு மக்களின் ஆரம்ப சுகாதார நிலையமும் முன்பள்ளியும்  இலங்கை அரசின் விமானப் படைமுகாம் மாறிப்போனது. அதற்கு எதிரிலே தரகங்களால் கூடாரங்களை அமைத்துக் கொண்டு, அதில் இருந்தும், அருகில் உள்ள வயல்களில் சமைத்து, உண்டு, உறங்கி எழுந்து கொண்டு 30 நாட்களாக வீடு திரும்பாமல் போராட்டத்தை முன்னெடுத்தனர் இந்த மக்கள். அந்த மக்கள் தங்கியிருந்து போராட்டம் நடத்தும் தகரக் கூடாரங்களில் ஒரு பத்து நிமிடம்கூட இருக்க முடியாது. பகல் முழுவதும் கடுமையான வெய்யில். பெண் குழந்தைகளும், சிறுவர்களும் வெயிலில் வாடிக் கறுத்துப் போயிருந்தார்கள்.
இரவு வந்ததும் கடும் பனி. இப்படித்தான் அந்த மக்கள் ஒவ்வொரு கணங்களையும் கடந்து கொண்டிருக்கிறார்கள். அந்த மக்கள் ஏன் இப்படி தெருவில் வந்து போராடினார்கள்? பல்வேறு போராட்டங்களைச் செய்து, பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டு ஏமாற்றப்பட்ட நிலையிலேயே மக்கள் மிகவும் பாதிப்பை தரும் இந்தப் போராட்டத்தைக் கையில் எடுத்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களின் உக்கிரமான வார்த்தைகள் இந்த நிலத்தில் மண் ஆக்கிரமிப்புக்கு எதிராக, இன ஒடுக்குதலுக்கு எதிராக வெகுண்டெழுந்த குரல்கள். நாங்கள் 84 பெண்களை இந்த நிலத்திற்காக கொன்றால், 84 ஆண்கள் வருவார்கள். நாளை எங்கள் வீடுகளிலிருந்து பிள்ளைகள் வளர்ந்து எங்கள் நிலத்திற்காக வருவார்கள். நிலத்தை மீட்காமல் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என்று உக்கிரமாக பேசினர் இப் பெண்கள். இராணுவமுகாங்களை தகர்க்கும் அனல் கொண்ட அச் சொற்கள் .இன்று வென்றுவிட்டன. கேப்பாபுலவில் முதல் அடியை எடுத்து வைத்திருப்பதுவே அந்த வெற்றி.
இத்தனை நாட்கள் பனியிலும் வெயிலிலும் இப்படி அலைய விட்ட அரசின் செயலை ஒருபோதும் மறக்க இயலாது? நாங்கள் தமிழ் மக்கள் என்பதால்தானே இப்படி ஓர வஞ்சனையா? அந்த மக்களே இலங்கை அரசின் இனப் பாரபட்சம் குறித்தும் இன ஒடுக்குமுறை குறித்தும் மிகவும் தெளிவாகவும் ஆழமாகவும் விளங்கிக் கொண்டனர். அந்தப் பச்சிழங் குழந்தைகளின் முகங்களை, பள்ளி செல்ல வேண்டிய சிறுவர்களின் முகங்களைப் பார்த்தால் மனசாட்சி உள்ளவர்களுக்கு இரக்கம் வரும். புகைப்படங்களில் கவனித்தால் புரியும். போராட்டம் நடத்தியபோது இருந்த குழந்தைகளின் முகங்கள் இப்போது இப்படி உள்ளன என்று.
குழந்தைகளும் முன்னெடுத்த போராட்டம் இது. ஒழுங்கான உணவின்றி, ஒழுங்கான உறக்கமின்றி, நிலம் இழந்த துயரம் படிந்த குழந்தைகள் என்ன குற்றம் செய்தனர்? தம் தாய் நிலத்திற்காக இப்படி பனியிலும் குளிரிலும் வெயியிலும் போராடினர். கேப்பாபுலவு பற்றிய சிறுவர்களின் பாடல்கள் இனி வரலாற்று காவியங்கள். தம் தாய் நிலம் குறித்தும் அதில் வாழ வேண்டிய வாழ்வு குறித்தும் அந்தப் பிஞ்சுகளிடம் இருக்கும் கனவை, ஆசையை அவர்கள் பாடினர். விமானப் படைவாசலாக்கப்பட்ட அப் பகுதியில் எந்த அச்சமுமின்றி விளையாடியது வெறும் விளையாட்டல்ல. விமானப் படையை நோக்கி அம்புவிட்டு விளையாடி பொழுதை கழித்தும் தங்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அப் பகுதி சிறுவர்கள் எவரும் பாடசாலை போகவில்லை என்று தாய் ஒருவர் குறிப்பிட்டார். அதனால் பிள்ளைகளுக்கு ஏற்படும் கல்விப் பாதிப்புக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கூறினார். மரங்களின் கீழே பெரியவர்கள் சொல்லிக் கொடுக்கும் பாடல்களைப் பாடி கதைகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள் சிறுவர்கள். ஆனால் எம் நிலத்திற்காக எப்படியெல்லாம் போராட வேண்டும் என்ற வரலாற்றுப் பாடத்தை கேப்பாபுலவுச் சிறுவர்கள் கற்றுக்கொண்டுள்ளனர். எந்தப் பாடசாலையிலும் அவர்கள் கற்க முடியாதொரு பாடத்தை அச் சிறுவர்கள் கற்றுவிட்டனர்.
எங்கள் நிலத்தை ஆக்கிரமித்தது யார்? யாருக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறோம்? இப்படி எல்லாம் போராடும் எங்களை குரலை ஏன் அரசு செவிசாய்க்கவில்லை? நாங்கள் யார்? ஏன் இப்படி எல்லாம் துன்புறுத்தப்படுகிறோம்? எங்களுக்கு என்ன நடக்கிறது? இவைகளை கேப்பாபுலவு சிறுவர்களுக்கு மாத்திரமல்ல, ஒட்டுமொத்த ஈழச் சிறுவர்களுக்கும் செய்திகள் வழியும் புகைப்படங்கள் வழியும் ஊடகங்கள் வழியும் எடுத்து உணர்த்திவிட்டது கேப்பாபுலவு மண்மீட்புப் போராட்டம்.
காணிகளை விடுவிப்பது தொடர்பில் அரச தரப்பினர் பலரும் இணக்கம் கூறியபோதும் மக்கள் போராட்டத்தை கைவிடவில்லை. இதனையடுத்து சில நாட்களின் முன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கை ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தையை நடாத்தியது. இராணுவம் வெளியேறி காணிக்குள் காலடி வைக்கும் வரை  மக்கள் தமது போராட்டம் தொடரும் என மக்கள் உறுதியாய் இருந்தனர். அந்த அடிப்படையில் இன்று காலை 11.30 அளவில் படைமுகாமை விட்டு இராணுவத்தினர் வெளியேறினர். மக்கள் இராணுவமாக்கப்பட்டிருந்த தங்கள் நிலத்தை கிராமாக்க வெற்றிக் களிப்புடன் நுழைந்தனர்.
இலங்கை விமானப் படையினரின், இலங்கை இராணுவத்தின் புலனாய்வுத் துறையினரின் அச்சுறுத்தல்களை தகர்த்தே இந்த மக்கள் மக்கள் போராடினர். தம்மை படமெடுக்கும் இராணுவத்தினரை திருப்பி படமெடுத்தனர் பெண்கள். அரசு காணிகளை விடுவிப்பதாக கூறியபோதும் இராணுவம் மக்களை அச்சுறுத்திக் கொண்டே இருந்தது. எல்லாத் தடைகளையும் உடைத்து தம் போராட்டத்தை வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக் காவியமாக்கினர் மக்கள். இன்றைக்கு தங்கள் பூர்வீக நிலத்தை வென்றிருக்கும் இந்த மக்களின் போராட்டம் இலங்கை அரச படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்து நிலங்களையும் மீட்டெடுக்கும் எழுச்சியை எங்கள் மக்களிடையே விதைத்துள்ளது. இதனை வைத்து ஜெனீவாவில் நிலங்களை விடுவித்துவிட்டோம் என்று இலங்கை அரசு காண்பித்து குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பிக்கொள்ளவும் இயலும். அந்த அரசியலுக்கு இடமளித்தால் எங்கள் நிலமை படுமோசமாகும்.
கேப்பாபுலவு மக்களை 30 நாட்கள் பனியிலும் வெயிலிலும் தள்ளிய நல்லாட்சி அரசின் அணுகுமுறை சொல்லும் சேதி ஏராளம். அத்துடன் 9 ஆண்டுகளாக இந்த மக்களை நிலமற்றவர்களாக்கிய இலங்கை அரசு சொல்லும் செய்தியும் ஏராளம். மக்களின் 84 ஏக்கர் காணிகளில் தற்போது 40 ஏக்கர் மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கேப்பாபுலவை அண்டிய 500 ஏக்கர் பகுதியை இராணுவம் ஆக்கிரமித்துள்ளது. வீதிகள், காடுகள் என்று அப் பகுதியே இராணுவத்தின் வசமுள்ளது. கேப்பாபுலவை விட்டு வெளியேறிய இராணுவத்தினர் மற்றொரு இடத்திலும் இராணுவமுகாமை அமைக்கவே போகிறார்கள். ஆக ஒரு பகுதி விடுவிக்க இன்னொரு பகுதி ஆக்கிரமிக்கப்படுகிறது. கேப்பாபுலபு இன்னும் மீட்கப்படவேண்டும். இந்த வெற்றி ஒட்டுமொத்த கேப்பாபுலவையும் விடுவிக்கும் உத்வேகத்தை அளிக்கும். ஈழத்தில் பல்லாயிரம் ஏக்கர் சனங்களின் காணிகளை மீட்பதும் இராணுவத்தை நீக்குவதே எங்களின் அடுத்த போராட்டமாகட்டும்.
(புகைப்படம்- கேப்பாபுலவுப் போராட்டத்தில் தீர்க்கமாக ஒலித்த குரல். அந்த மக்களின் எழுச்சியின் அடையாளம். தாய் நிலத்திற்காக உக்கிரமாக முன்னின்று குரல் கொடுத்து கவனத்தை ஈர்த்த பெண். போராட்ட ஆரம்ப நாட்களிலும் இன்று நிலத்தை விடுவிக்கப்பட்டபோதும் இருந்த காட்சிகள்)
குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More