Home இலங்கை சுன்னாகம் இளைஞர் கொலை வழக்கு சந்தேக நபர்களின் பிணை நிராகரிப்பு

சுன்னாகம் இளைஞர் கொலை வழக்கு சந்தேக நபர்களின் பிணை நிராகரிப்பு

by admin

இளைஞர் ஒருவரை படுகொலை செய்து குளத்தில் வீசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சுன்னாகம் காவல் நிலைய முன்னாள்  பொறுப்பதிகாரி உள்ளிட்ட நான்கு காவல்துறை உத்தியோகஸ்தர்களின் பிணை விண்ணப்பம் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனால் நிராகரிக்கப்பட்டு உள்ளது.

கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் குறித்த கொலை வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றது. கொலை குற்றசாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட ஐந்து காவல்துறையினரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களின் நால்வர் தமது சட்டத்தரணி ஊடாக இன்றைய தினம் யாழ்.மேல் நீதிமன்றில் பிணை விண்ணப்பம் செய்தனர்.

குறித்த சந்தேக நபர்களை பிணையில் விடுவிப்பதற்கு அரச சட்டத்தரணி மன்றில் ஆட்சேபணை தெரிவித்ததையடுத்து பிணை விண்ணப்பத்தை நிராகரித்த நீதிபதி , குறித்த பிணை மனு மீதான விசாரணை எதிர்வரும் 4ஆம் திகதிக்கு எடுத்துக்கொள்ளப்படும். அதுவரையில் சந்தேக நபர்களை விளக்கமறியலில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு நீதிபதி உத்தரவு இட்டார்.

வழக்கின் பின்னணி. 

கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ம் திகதி சுன்னாக பகுதியை சேர்ந்த சிறிஸ்கந்தராஜா சுமணன் எனும் இளைஞரை பொய் குற்றசாட்டின் கீழ் காவல்துறையினர் கைது செய்து சித்திரவதை செய்து படுகொலை செய்தனர் எனவும், படுகொலை செய்யப்பட்டவரின் உடலை கிளிநொச்சி இரணைமடு குளத்தில் வீசி தற்கொலை செய்து கொண்டார் என காவல்துறையினர் கூறியதாகவும் , படுகொலையானவரின் நண்பர்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு யூலை மாதம் 25ஆம் திகதி மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.யூட்சன் முன்னிலையில் சாட்சியம் அளித்து இருந்தனர்.

அதனை அடுத்து சுன்னாகம் காவல் நிலையத்தை சேர்ந்த நிலைய பொறுப்பதிகாரி சிந்தக்க பண்டார , மயூரன் , தயாளன் , சஞ்ஜீவ ராஜபக்சே , ஜெயந்த , வீரசிங்க , கோபி (குறித்த நபர் நாட்டில் இல்லை , அவருக்கு எதிராக பகிரங்க பிடிவிறாந்து நீதிமன்றினால் பிறப்பிக்கபட்டு உள்ளது.) லலித் , ஆகிய    8 காவல்துறை உத்தியோகஸ்தர்கள்  மீது குற்றம் சுமத்தப்பட்டது. அதில் 7 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டு உள்ளன.

அதில் 5 காவல்துறை உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக கொலை குற்றசாட்டு சுமத்தப்பட்டு கிளிநொச்சி நீதிமன்றிலும் , கொலை குற்றம் சாட்டப்பட்டு உள்ள 5 பேர் உட்பட  8 பேருக்கு எதிராக சித்திரவதை குற்ற சாட்டு சுமத்தப்பட்டு யாழ்.மேல் நீதிமன்றிலும் வழக்கு தொடரப்பட்டு வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More