Home இலங்கை யாழில் வங்கியொன்றின் திருகுதாளம் வெளிப்பட்டது – காதோடு காதாக அராலியூர் குமாரசாமி:-

யாழில் வங்கியொன்றின் திருகுதாளம் வெளிப்பட்டது – காதோடு காதாக அராலியூர் குமாரசாமி:-

by admin

வங்கியில் கணக்குள்ளவர்கள் ஏ.ரி.எம் காட்டை வங்கியில் பதிவு செய்து எடுத்தால் தேவைக்கேற்ப எந்த நேரமும் எங்கேயும் இலகுவாக ஏ.ரி.எம் நிலையத்தினூடாக பணத்தை எடுக்க முடியும். அதனால் தான் இன்று மக்கள் எல்லோரிடமும் ஏ.ரி.எம் காட் கையில் இருக்கிறது. இதனால் எந்த நேரமும் ஏ.ரி.எம் நிலையம் பிசியாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அல்லது கணக்குப் புத்தகத்தைக் கொண்டு வந்து வங்கியில் பணத்தை எடுத்துப் போக அரை நாள் ஓடிவிடும். அடுத்தது வங்கி திறந்திருக்கும் நேரம் தான் பணத்தை எடுக்க முடியும். எந்த நேரமும் பணத்தை எடுக்க முடியாது. ஏ.ரி.எம் வசதி வந்ததால் பணத்தை எடுப்பதற்காக நேரத்தை ஒதுக்க வேண்டியதில்லை. இது மக்களுக்கு இலகுவாக அமைந்துவிட்டது.

கடந்த சனிக்கிழமை ஏ.ரி.எம்மில் பணத்தை எடுப்பதற்காக வங்கி ஒன்றின் ஏ.ரி.எம் நிலையம் ஒன்றின் வாசலில் நிற்கிறேன். ஒவ்வொருவராக ஏ.ரி.எம் நிலையத்துக்குள் சென்று பணம் எடுத்து வருகிறார்கள். நான் ஜந்தாவது ஆளாக உள்ளே சென்று பணம் எடுத்துக் கொண்டு வரும் போது அங்கே நின்ற எனது நண்பன் ‘கணக்கின் மீதியைப் பார்த்தியா’ என்று கேட்டான். நானோ ‘இல்லை ஏன்?’ என்று கேட்டேன். அவனோ ‘எடுத்த பணத்தை விட கூடுதலாக பணம் கணக்கில் குறையிது என்று சொல்லுறாங்கள்  அது தான் கணக்கு மீதியைப் பார்க்கச் சொன்னேன்’. என்றான். உடனே நான் மீண்டும் ஏ.ரி.எம் நிலையத்துக்குள் ஓடிச் சென்று குப்பைக் கூடைக்குள் இருந்த எனது கணக்குச் சிட்டையை எடுத்துப் பார்த்தேன் சரியாக இருந்தது. அப்பொழுது தான் எனக்கு மூச்சே வந்தது. ஏ.ரி.எம் நிலையத்தை விட்டு வெளியே வந்தேன்.

நண்பனிடம் ‘சரியாக இருக்கிறது’ என்றதும் அவனோ ‘சரி வா உனக்கு ஒன்று தெரியுமா?’ என்று சொல்லிவிட்டு மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்றான் அவன் செல்லும் பக்கம் நானும் சென்றேன். யாழ்.தட்டாதெருச் சந்தியைக் கடந்து ராதா ஒழுங்கைக்குள் இறங்கினான் அங்கே ஒரு மரநிழலின் அருகில் ஒதுங்கினான். நானும் ஒதுங்கினேன். ‘என்ன சொல்ல வந்தனி’ என்று அவனிடம் கேட்டேன். அவனோ சொல்லத் தொடங்கினான்.

‘யாழ். கச்சேரியடியைச் சேர்ந்த ஓட்டோ ..றி அண்ணையைத் தெரியுமா? என்று கேட்டான். நானோ ‘ஓ தெரியும்’ என்றேன். அவனோ ‘அவருக்கு அண்மையில் ஒரு சம்பவம் நடந்தது அவருடைய வங்கி ஒன்றின் கணக்கில் இருந்து மாதம் மாதம் ஒரு தொகை பணத்தை வங்கியினரே வெட்டியுள்ளனர். ஒரு வருடமாக இவரின் கணக்கில் இருந்து வங்கியே பணத்தை வெட்டி வந்தது இவருக்குத் தெரியாமல் இருந்தது. அண்மையில் இவரின் ஓட்டோவில் இருந்த இவரது ஜ.சி லைசென்ஸ் இன்சூரன்ஸ் ரக்ஸ் ஏ.ரி.எம் காட் போன்ற ஆவணங்கள் களவு போனது. ஓட்டோ தரிப்பிடத்தில் அல்லது அவரது வீட்டில் தான் களவு போயிருக்கும் என்று சிறியண்ணை சொல்லி இருக்கிறார். ஓட்டோவில் உள்ள பெட்டியில் இருந்த இந்த ஆவணங்கள் களவு போன விடயம் 3 நாள்களின் பின்னர் தான் ..றியண்ணைக்கே தெரிய வந்தது.

உடனடியாக வங்கிக்கு அறிவித்து ஏ.ரி.எம் இணைப்பைத் தடை செய்தார். அதன் பின்னர் தான் இவரது ஏ.ரி.எம் காட்டைப் பயன்படுத்தி 150.000 ரூபாவைக் களவெடுத்தது தெரியவந்தது மட்டுமல்ல இவரின் கணக்கில் இருந்து மாதம் மாதம் சிறு தொகை பணத்தை பணத்தை வெட்டியதும் தெரிய வந்தது. வங்கியில் சென்று விசாரித்த போது பதில் சொல்ல முடியாது நாளை வருமாறு அவர் போகும் போதெல்லாம் அலைக்கழித்தார்கள். தொடர்ந்து சென்றதால் எடுத்த பணத்தை அவரின் கணக்கில் வைப்பிலிட்டார்கள். காரணம் கேட்ட போது சொல்ல மறுத்துவிட்டார்களாம்.

இப்பத்த காலம் எவரையும் நம்பமுடியாத காலமாகும். அதுதான் உனது வங்கிக் கணக்கை சரி பார்த்துக் கொள் என்று சொன்னேன்’ என்று சொல்லி விட்டு என்னைவிட்டு நகர்ந்து சென்றான்.

வங்கியில் பாதுகாப்பாக இருக்கும் என்று பணத்தை வைப்பிலிட்டு பாதுகாக்க ஆவணங்களை களவெடுத்து  பணத்தைக் களவெடுக்க வங்கியும் தனது பங்கிற்கு பணத்தை வெட்டியது வேலியே பயிரை மேய்ந்த கதையாகிப் போனது. சிறியண்ணையைத் தொடர்பு கொண்டு கேட்ட போது எனது நண்பன் சொன்னதை அப்படியே சொன்னார். யாழ்.பொலிஸில் தனது ஆவணங்கள் களவு போன முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளதாகச் சொன்னார். ஏ.ரி.எம்மில் இருந்த சி.சி.ரி கமெராவில் திருடனின் முகம் தெளிவாகத் தெரியவில்லை என்றால் எதற்கு ஏ.ரி.எம்மில் சி.சி.ரி கமெரா என்று வேதனையுடன் சொன்னார். பணத்தை எடுத்த கள்வனைப் பிடிப்பதற்காகத் தேடுகின்றோம். வங்கியாளர்களே எனது கணக்கில் இருந்து பணத்தை வெட்டியதை கண்டுகொண்டும். உள்ளே உள்ள கள்வனை ஒன்றும் செய்ய முடியவில்லை என்றால் வெளியே உள்ள கள்வனைப் பிடித்து என்ன செய்ய முடியும்.

ஒரு ரூபாய் தானே என்று விட்டு விடுவோமானால் அந்த ஒரு ரூபாய் பத்தாகி பத்து ரூபாய் நூறாகி நூறு ரூபாய் ஆயிரமாகி ஆயிரம் ரூபாய் லட்சமாகிப் போகும் எனவே வங்கிக் கணக்கை வைத்திருப்பவர்கள் பணத்தை மீள எடுக்கும் போதும் வைப்புச் செய்யும் போதும் கணக்கு மீதியை சரி பார்த்துக் கொள்ளுங்கள். அப்பொழுது தான் உங்களின் கணக்குகளில் எவரும் கை வைக்கமாட்டார்கள். இன்றைய காலத்தில் திருடர்கள் அதிகமாகக் காணப்படுகின்றார்கள். ரை கட்டி கோட்டு சூட்டுப் போட்டு மக்களிடம் திருடுபவர்கள் அதிகம் காணப்படுகின்றார்கள்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More