Home இலங்கை சிறுபான்மை இனங்களை அச்சுறுத்தும் பேரின மதவாதம்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-

சிறுபான்மை இனங்களை அச்சுறுத்தும் பேரின மதவாதம்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-

by admin

இலங்கைத் தீவில் மாபெரும் இரத்தக்களறி ஏற்பட்டது என்றதால் அதற்கு இங்கு நிலவும் பேரின மதவாதமே காரணம் ஆகும். ஈழத் தமிழ் மக்கள் லட்சக் கணக்கில் கொன்றழிக்கப்பட்டார்கள் என்றார் அதற்கு பேரின மதவாதமே காரணம். தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு இலங்கை என்பது சிங்கள பௌத்த நாடு என்ற கடும் வாதம் ஏற்பட்டதன் காரணமாகவே ஈழத் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தி தனி நாடு கோரிப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இத்தகைய அனுபவங்களின் பின்னரும் இலங்கையில் பேரினவாத மதவாதம் இன்னும் உயிர்ப்புடன் இருந்து சிறுபான்மை இனங்களை எச்சரிக்கின்றது என்பதே அதிர்ச்சிகரமானது.

தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடக்கு கிழக்கில் சிங்கள பௌத்த அடையாளங்களை நிறுவுவதன் ஊடாக இன்றைக்கு மாத்திரமல்ல வரலாறு முழுவதற்கும் அச்சுறுத்தல்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அண்மையில் கிளிநொச்சி கிருஷ்ணபுரம் மக்கள் தமது கிராமத்தில் உள்ள பிள்ளையார் ஆலயத்தின் காணியை புத்தர் எட்டு வருடங்களாக ஆக்கிரமித்துள்ளதாகவும் இதனைக் குறித்து பேச முடியாத நிலையில் எட்டு வருடங்களாக இருந்துள்ளதாகவும் அந்த மக்கள் குறிப்பிட்டுள்ளனர். சிறுபான்மை இன மக்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதுபோலவே வழிபாட்டுத் தலங்களையும் ஆக்கிரமிக்கின்றனர்.

இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பல ஆயிரம் காணிகளை விடுவிக்க மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். மக்கள் பிரதிநிதிகள் அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றனர். காணி ஆக்கிரமிப்பு என்பது இலங்கை அரசுக்கு சர்வதேச அளவில் ஆக்கிரமிப்பு ப் பெயரை ஈட்டிக் கொடுத்துள்ளது. நிலத்தையும் அதிகாரத்தையும் தம் வசம் வைத்திருப்பதன் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி ஆள்வதே அரசின் நோக்கம். அதனை இராணுவ அதிகாரத்தின் வசம் வைத்திருப்பதன் மூலம் ஒடுக்குமுறையை இன்னும் கூர்மையாக்கலாம் என்றும் இலங்கை அரசு கருதுகின்றது.

இந்த நிலையில் இராணுவத்திற்கு அடுத்தபடியாக, சீருடை, துப்பாக்கி ஏதுமற்ற ஒரு இராணுவமாக புத்தர் சிலைகளை அரச படையினர் உபயோகிக்கின்றனர். தமிழ் மக்களின் நிலத்தில் அவர்களின் சமய வழிபாடுகளுக்கு சம்பந்தமில்லாத வகையில், அவர்களின் வழிபாட்டு இடங்களுக்கு எதிராகவும் அச்சுறுத்தலாகவும் புத்தர்சிலைகளும் விகாரைகளும் நிறுவப்பட்டுள்ளன. இராணுவத்தினர் நிலை கொண்டுள்ள இடங்கள் முழுவதும் புத்தர் சிலைகளையும் விகாரைகளையும் நிறுவியுள்ளனர். அந்த வகையில் பார்த்தால் இராணுவ ஆக்கிரமிப்பின் உச்சத்தை புத்தர்சிலைகளும் விகாரைகளும் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

கடந்த ஆட்சியாளர்களால் அவர்களின் அரசியல் தேவைக்காகவும் ஆயுதமற்ற யுத்தத்தை நடாத்தவும் பௌத்த பேரினவாத அமைப்புக்கள் உருவாக்கப்பட்டன. இவை தொடர்ந்தும் தமிழ் பேசும் மக்களை அச்சுறுத்திய வண்ண்ம் உள்ளன. வெளிப்படையாகவும் கடும்போக்காவும் விடுக்கப்படும் இந்த அச்சுறுத்தல்களுக்கு உரிய நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. கடந்த ஆண்டு பொதுபலசேனா, முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டம் நடாத்த வெளியில் வந்தால் நெருப்பு வைத்துக் கொளுத்துவோம் என்று எச்சரித்தபோதும் அதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

அண்மையில் இலங்கை அமைச்சர் மனோ கணேசனை பொதுபலசேனாவின் ஞானசாரதேரர் கடுமையாக அச்சுறுத்திப் பேசி வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். மனோ கணேசன் இன்றிருக்கும் மலையக அரசியல் தலைவர்களின் நம்பிக்கை தரக்கூடியவர். நிதானமாக பிரச்சினைகளை அணுகுபவர். ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினை குறித்தும் உண்மையின் அடிப்படையில் குரல் கொடுப்பவர். மலையக மக்கள், இஸ்லாமிய மக்கள், ஈழத் தமிழ் மக்கள், சிங்கள மக்கள் என அனைவரது பிரச்சினைகளையும் சரியாக அணுகுபவர். அதுவே பௌத்த அடிப்படை இனவாதிகளுக்கு சிக்கலானது. அதனாலேயே அவருடன் ஞானசார தேரர் வாக்கு வாத்தில் ஈடுபட்டார். இந்த நாடு சிங்களவர்களின் சிங்களவர்களுக்கே சொந்தம் என்ற தன் கற்பனையை அவருக்குக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் பொதுபலசோனவின் ஞானசார தேரரை கைது செய்ய உத்தரவு இடப்பட்டுள்ளதாகவும் அவர் தலைமறைவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எவரும் தலைமறைவாக முடியாத டிஜிட்டல் உலகில் ஞானசார தேரர் தலைமறைவாகியிருப்பதுதான் வேடிக்கையானது. அது மாத்திரமின்றி விக்கினேஸ்வரனை கைது செய்தால்தான் தேரர் வந்து சரணடைவார் என்று அந்த அமைப்பு அறிவித்துள்ளது. விக்கினேஸ்வரன் எந்த இனங்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கவில்லை. அவர் உரிமையை இழந்த இனத்தின் உரிமைகளை கோருகிறார். பாதிக்கப்பட்ட இனத்தின் நீதியை கோருகிறார். அவரது கோரிக்கையை திசை திருப்பும் முயற்சியே இது. தமிழ் மக்களுக்கான உரிமையை, நீதியை மறுக்கும் செயலே இது.

இலங்கை அரசின் அரசியல் கட்டமைப்பே சிங்கள பௌத்த ஆதிக்கத்திற்கு அடிப்படையானது. அதில் மாற்றம் ஏற்படாத வரை, அதை மாற்றும் எண்ணம் அரசுக்கு ஏற்படாத வரை இந்த சிக்கல்கள் தொடரும். இத்தகைய கட்டமைப்பை ஒன்றைப் பேணி சிறுபான்மை மக்களை தொடர்ச்சியாக ஒடுக்கி ஆள்வதே இலங்கை அரசின் போக்காகவும் நோக்காகவும் இருந்துள்ளது.தமிழ் பேசும் மக்கள் ஒருபோதும் தமது உரிமைகளையோ, தமது அடையாளங்களையோ இழந்து வாழ இயலாது. தனிச்சிங்கள சட்டம், பௌத்தத்திற்கான முன்னுரிமைகள், சிங்கள அடையாள ஆதிக்கம் என்பன இத்தீவின் வரலாற்றை எத்தகைய நிலைக்கு கொண்டு சென்றது என்ற வலாற்றை மறக்காதிருப்போம்.

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More