Home இலங்கை வடக்கு கிழக்கில் சிங்களவர்கள் சிறுபான்மையாக இருப்பது அச்சம் தருமெனில் இலங்கைக்குள் தமிழர்கள் சிறுபான்மையாக எப்படி இருப்பது?

வடக்கு கிழக்கில் சிங்களவர்கள் சிறுபான்மையாக இருப்பது அச்சம் தருமெனில் இலங்கைக்குள் தமிழர்கள் சிறுபான்மையாக எப்படி இருப்பது?

by admin

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் 

இலங்கைத் தீவில் நடைபெற்ற இன ஒடுக்குமுறைச் செயல்கள் மற்றும் இன அழிப்புக்கு அடிப்படையான பிரச்சினைகளை தீர்ப்பதில் இலங்கையின் தற்போதைய அரசாங்கமும் மெய்யான அக்கறையைக் காட்டவில்லை என்பதை புதிய அரசியலமைப்பு தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் உணர்த்துகின்றன. இலங்கையில் நடந்த நிகழ்வுகளுக்கு தீர்வொன்றை முன் வைக்கும் முகமாக புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக இலங்கை அரசாங்கம் சர்வதேச மட்டத்திலும் தமிழ் தலைமைகள் மட்டத்திலும் வாக்குறுதி அளித்து வந்தது. காலம் காலமாக இலங்கையின் சிங்கள அரசுகள் தமிழ் மக்களை ஏமாற்றி வந்துள்ள நிலையில் இந்த வாக்குறுதி எந்தளவுக்கு சாத்தியமானது என்ற  சந்தேகம் தமிழ் மக்களின் சந்தேசகத்தை இந்த உரையாடல்கள் மேலும்
காலனிய  ஆட்சிக் காலத்தில் ஒட்டுமொத்த சிலோன் தீவையும் தமிழ் தலைவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தினர். ஒன்றிணைக்கப்பட்ட இலங்கையின் விடுதலைக்காகவும் சிங்களத் தலைவர்களின் விடுதலைக்காகவும் முன்னின்று தமிழ் தலைவர்கள் உழைத்தனர். எனினும் பிரித்தானியர்களிடமிருந்து இத்தீவு விடுதலை பெற்ற பின்னர் தமிழ் மக்கள் சிறுபான்மையினர் என்பதால் உரிமைகளை இழந்துபோயினர். தாம் தாம் ஆண்டு வந்த ஆட்சியை இழந்தனர். பிரித்தானியர்களால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு, தீவில் பெரும்பான்மையினராக இருந்த சிங்களவர்களின் அதிகாரத்தை விஸ்தரிப்பதற்கும் ஈழத் தமிழ் இனத்தை அழித்து ஒழிப்பதற்கும் சாதமாகமானதொரு சூழலையே ஏற்படுத்தியது.
அத்துடன், சிங்கள அரசுகளால் அரசியலமைப்பு மேம்படுத்தப்பட்ட போதும் தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டதுடன் அவர்களின் ஆட்சி அதிகாரங்கள் தம் வசப்படுத்தப்பட்டன. அத்துடன் தமிழ் பேசும் மக்களை இரண்டாம் தரப் பிரசைகளாகவும் அவர்களை அடக்கி ஒடுக்கும் நுட்பான திட்டங்களையும் இலங்கை அரசியலமைப்பு கொண்டிருந்தது. இந்த நிலையில் மகிந்த ராஜபக்சவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிய மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க அரசு, புதிய அரசியலமைப்பு ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வை காணப்போவதாக கூறி வந்தது. அத்துடன் இந்தச் செயற்பாட்டில் தமிழ் தலைமைகளும் இணைய வேண்டும் என்று கோரியது.
இதன் பிரகாரம் தமிழ் பேசும் மக்களின் தலைமைகளும் இணைந்து புதிய அரசியலமைப்பு உருவாக்கும் முயற்சிகள் இடம்பெற்றுவருகின்றன. இதேவேளை இலங்கை அரசாங்கம் புதிய அரசியலமைப்பு தொடர்பில் வடக்கு கிழக்கு மக்களின் கருத்துக்களை அறியும் அமர்வுகளையும் நடத்தியது. இதன்போது ‘வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும்’ என்றும் ‘வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தை இலங்கை அரசு அங்கீகரிக்க வேண்டும்’ என்றும் ‘வடக்கு கிழக்கு மாகாணத்தை தமிழீழ மாநிலமாக அரசு பிரகடனப்புடுத்த வேண்டும்’ என்றும் தமிழ் மக்களால் பரவலாக வலியுறுத்தப்பட்டது. புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்கள் தம்மைத்தாமே ஆளும் சுயாட்சி அங்கீகரிக்கப்படவேண்டும் என்பதை தமிழ் மக்களும் தமிழ் தலைமைகளும் வலியுறுத்தி வந்தன.

இலங்கை  அரசின் இன ஒடுக்குமுறைகளைக் கண்டும், அவ் அரசின் இன அழிப்புச் செயல்களைக் கண்டும் தனி நாடு கோரி ஈழத் தமிழ் மக்கள் போராடினார்கள். இந்தப் போராட்டத்தையும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களையும் இன அழிப்பை ஆயுதமாக வைத்தே இலங்கை அரசு ஒடுக்கியது. ஆனாலும் மாபெரும் இனப் படுகொலைகளின் பின்னரும் தமிழ் மக்கள் தமக்கான உரிமையையும் தமது தேசத்தை பாதுகாக்கும் அவசியத்தையும் பல்வேறு வகையிலும் வெளிப்படுத்தி வருகின்றனர்.  தனிநாடு கேட்ட தமிழ் மக்கள்  இன்று விட்டுக் கொடுப்புக்களுடன் வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டியை கோருகின்றனர்.

ஒற்றையாட்சியை நடைமுறைப்படுத்தினால் மீண்டும் முரண்பாட்டிற்கே வழி வகுக்கும் என்றும் வடக்கு கிழக்கில் நடத்திய கலந்துரையாடல்களில் அனைத்து தமிழ் மக்களும் தன்னாட்சியையே  வலியுறுத்தியதாகவும் மாற்றுக்கொள்கைக்கான மத்திய நிலையத்தின் பணிப்பாளரும் நல்லிணக்கச் செயலணியின் பொதுச் செயலாளருமான பாக்கியசோதி சரவணமுத்து குறிப்பிட்டுள்ளார். ஒற்றையாட்சி அடிப்படையிலான தீர்வை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள் என்றும்  சர்வஜன வாக்கெடுப்பில் தமிழ் மக்கள் அதனை நிராகரிப்பார்கள் என்றும் அவர் கூறியதும் கவனிக்கத் தக்கது.

இந்த நிலையில் புதிய அரசியலமைப்பில் வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை என்ற கருத்தை சில தமிழ் சிங்கள தலைவர்கள் முன்வைத்து வருகின்றனர். தமிழ் மக்களால் மிகவும் அடிப்படை அபிலாசையாக எதிர்பார்க்கப்படும்  வடக்கு கிழக்கு இணைப்பை நிராகரிக்கும் ஒரு அரசியலமைப்பை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இதற்கு வரலாற்று ரீதியான, அடிப்படையான காரணங்கள் காணப்படுகின்றன. வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தை சிங்கள பூமியாக்கும் திட்டத்தை, தமிழர் தாயக மண்ணின் அதிகாரத்தை கைப்பற்றும் திட்டத்தை தொடர்வதற்காகவே இவ்வாறு வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை என்று கூறப்படுகின்றது.
மாறாக, வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தை சிங்கள பூமியாக்கும் திட்டத்தின், தமிழர் தாயக மண்ணின் அதிகாரத்தை கைப்பற்றும் திட்டத்தின்  காரணமாகவே வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தை தனிநாடாகக் கோரும் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 2009இல் நிகழ்ந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பின்னர், வடக்கு கிழக்கை இணைத்து அங்கு சமஸ்டி ஆட்சியை ஏற்படுத்தக் கோரும் தமிழர்களின் குறைந்தபட்சக் கோரிக்கையையும் இலங்கை அரசு ஏற்றுக்கொள்ளாமைக்கு விசித்திரமான – வேடிக்கையான காரணமொன்று சொல்லப்படுகின்றது. இந்தக் காரணம்தான் சிங்கள ஆதிக்கத்தின் குணாம்சத்தை மிகவும் துல்லியமாக புலப்படுத்துகிறது.
அந்தக் காரணமானது, வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டால் சிங்களவர்கள் சிறுபான்மை இனமாக மாறிவிடுவார்கள் என்ற அச்சம் சிங்கள மக்களிடம் காணப்படுகின்றதாம். கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட குடியேற்றங்களின் மூலம் குடியேற்றப்பட்ட சிங்களவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அந்த மண்ணின் பூர்வீக மக்களின் எதிர்பார்ப்பையும் அபிலாசையையும் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்குவது எந்த வகையில் நியாயமானது? இன்னொரு விடயம், வடக்கு கிழக்கில் சிங்களவர்கள் சிறுபான்மையாக இருக்க அஞ்சுகிறார்களாம். அப்படியெனில் இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் சிறுபான்மையாக இருக்க எவ்வளவு அஞ்ச வேண்டும்? மாபெரும் இனப்படுகொலைகள், இன ஒடுக்குமுறைகளை சந்தித்த ஈழத் தமிழ் மக்கள் எவ்வளவுக்கு அஞ்ச வேண்டும்?
அப்படிப் பார்த்தால், சிறுபான்மை இனமாக இருக்கும் தமிழ் மக்கள், தம்மீது நிகழ்த்தப்பட்ட ஒடுக்குமுறை மற்றும் இன அழிப்பச் செயல்கள் காரணமாக, தமிழீழத் தனிநாடு கோரி முன்னெடுத்த போராட்டம், மிகவும் நியாயமானது என்பதை இத்தகைய கருத்துக்களை சொல்பவர்கள் ஏற்றுக்கொள்கின்றனரா? தவிரவும் வடக்கு கிழக்கு இணைப்பை தென்னிலங்கை சிங்கள மக்களோ, சிங்கள இனவாதிகளோ, சிங்கள இனவாத அரசோ தீர்மானிக்க முடியாது. அது வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் பேசும் பூர்வீக மக்களால் தீர்மானிக்கப்படவேண்டும். வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் வாழ வேண்டும் என்பதற்காகவே பல்வேறு தியாகங்கள் இந்த மண்ணில் நிகழ்த்தப்பட்டது. பல லட்சம் மக்கள் தமது உயிரை  கொடுத்தும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்தியராட்சிக்கு முந்தைய காலத்தில் இலங்கைத் தீவில் பல அரசுகள் காணப்பட்டன. வடக்கில் யாழ்ப்பாண அரசு புத்தளம் வரை ஆட்சி செய்ததது. கிழக்கில் தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்தனர். தெற்கில் சிங்கள மன்னர்கள் கோட்டை இராட்சியம், கண்டி இராட்சியம் என்ற அரசுகள் காணப்பட்டன. பிரித்தானியர்கள் இலங்கையில் காணப்பட்ட பல்வேறு அரசுகளை ஒன்றிணைத்து சிலோன் என்ற நாட்டை உருவாக்கினர். இதன்போது வடக்கு கிழக்கில் தனித்துவமாக வாழ்ந்து வந்த தமிழ் மக்கள் தங்கள் ஆட்சி அதிகாரங்களை இழந்து சிறுபான்மை மக்களாவும் உரிமையற்றவர்களாகவும் ஆக்கப்பட்டனர். இதன் விளைவாகவே தமிழ் மக்கள் பிந்தைய காலத்தில் இன ஒடுக்குமுறைகளையும் இன இழிப்புச் செயல்களையும் சந்திக்க நேரிட்டது.
வடக்கு கிழக்கு இணைப்பு என்பது இலங்கைத் தீவின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு  அடிப்படையானதாகும். இதுவே தமிழ் மக்களின் பாதுகாப்புக்கும் அரணமாக அமையும். தமிழ் மக்கள் இதுவரை சந்தித்த கசப்பான இன வெறுப்பு மற்றும் ஒடுக்குமுறை அனுபவங்களை இனியும் சந்திக்காமல் இருக்க வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு, சுயாட்சி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இந்த குறைந்தபட்சத் தீர்வைக்கூட இலங்கை அரசு மறுத்தால், இந்தத் தீவில் சிறுபான்மை இனமாக தொடர்ந்தும் ஒடுக்குமுறைகளை சந்திக்க முடியாத தமிழ் மக்கள் தமிழீழத் தனிநாடு கோரிய போராட்டத்தை கையில் எடுக்க இலங்கை அரசே நிர்பந்திக்கிறது என்பதையே இங்கு புரிந்து கொள்ள வேண்டும்.
குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More